06 Oktober 2015

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்!


பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள் !

1.என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.
2.தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.
3.இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.
4.மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
5.இதயத்தை பலப்படுத்தும் தாமரை.
6.தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.
7.இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).
8.மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.
9. நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.
10.மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.
11.வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.
12.உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
13.மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.
14.குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.
15.ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.
16.கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.
17.மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.
18.நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.
19.வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.
20.நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.
21.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.
22.மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.
23.மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.
24.மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.
25.சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.
26.ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.
27.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.
28.ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.
29.ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.
30.முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
31.மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.
32.முகம் அழகுபெற திராட்சை பழம்.
33.அஜீரணத்தை போக்கும் புதினா.
34.“பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.
35.பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.
36.மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
37.சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
38.தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.

10 Juni 2014

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?

நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார்!

26 März 2014

தேங்காயின் மருத்துவக் குணங்கள்

தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.

தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப் பட்டுள்ளன.

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.

தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம்.

இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை.

விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள். தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் : ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை.

தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப் படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள்: தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும்.

தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன.

இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.

தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி : முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக: குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர்.

சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம். இளநீர் மிக மிகச் சுத்தமானது.

இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.

சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்

இளநீர்

கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், தாது உப்புக்களும், உயிர்சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு, பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.

இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.

இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

இயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகுபொருள் (ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.

இயற்கை சுத்திகரிப்பு இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விரல்களும் மருத்துவமும்

1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும். .

9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.
10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும். 

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.

27 April 2012

KIWI(சீனத்து நெல்லிக்கனி) யின் மருத்துவப் பண்புகள்

கிவி பழம் உடல் நலத்திற்கு மிகவும்  நல்லது. மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட கிவி (Kiwi) என்ற பெயருடைய இந்தக் கனிக்கு சீனத்து நெல்லிக்கனி (Chinese Gooseberry) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தகைய கனி பற்றி உலக அளவில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நிறைய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இந்தக் கனிக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது?

இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக அளவு பயிரிடப்படுகிறது, அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தக் கனிக்கு ‘கிவி’ (KIWI) என்ற சிறப்புப் பெயர் உண்டு. பொதுவாக உலகில் நியூசிலாந்து நாட்டு மக்களை ‘க்விஸ்’ என்று செல்லமாக அழைப்பதுண்டு. அதன் காரணமாகத்தான் இந்தக் கனிக்கு உலகில் ‘கிவி’ என்ற பெயர் ஏற்பட்டது.

மேலும் பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்தக் கனியானது சீன நாட்டில் பயிரிடப்படுவதால், இந்தக் கனியை, உலகிலுள்ள மக்கள் பொதுவாக ‘சீனத்து நெல்லிக்கனி’ (Chinese Gooseberry) என்றும் அழைக்கிறார்கள். தற்பொழுது இத்தகைய கனியானது, நியூஸிலாந்து, இத்தாலி, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தக் கனியின் மருத்துவப் பண்புகள்:

உலகெங்கும் பல்வகையான நாடுகளில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் யாவும், இந்தக் கனியை சிறந்த ‘மருத்துவப் பெட்டகம்’ என போற்றுகின்றன.கிவி கனியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது. இதன் காரணமாக, தங்கள் உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக் கனியை அச்சமில்லாமல் உண்ணலாம்.பொதுவாக விட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது.நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது!

நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ‘ரேடிக்கிள்கள்’தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன. இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் இத்தகைய கனிக்கு இயற்கையாக உள்ளது.முதுமைக் கால கண் நோய்களைத் தடுக் ,விட்டமின் சி என்ற சத்துடன் இணைந்து, மேற்கூறிய முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க துணைபுரிகின்றது! இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மாரடைப்பைத் தடுக்கின்றது:

மாரடைப்பிற்கு முன்னர் பல்வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாகக் குழுமி, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் இரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு (Heart Attack) வழிவகுக்கின்றது. இவ்வாறு இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் ‘கிவி’ கனிக்கு இயற்கையாக உள்ளது. வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும்:கிவி பழத்தில் ‘ஃபோலேவி(FOLATE) என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.

இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.

நீரிழிவு நோயாளி உண்பதற்கு சிறந்த கனி:

ஏனென்றால், கிவி கனியின் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவான அளவாக இருப்பதால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மற்ற கனிகளைப் போல் விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் உண்பதற்கு சிறந்த கனியாகக் கருதப்படுகிறது.


உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு சிறந்த மருந்து! உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு கிவி கனியானது மிகவும் சிறந்த கனியாக கருதப்படுகின்றது. ஏனென்றால், மற்ற கனிகளுடன் ஒப்பிடும் பொழுது கிவியில் மிகவும் குறைவான அளவில் கலோரிகள் உள்ளன. ஒரு சாதாரண கனியில் சுமார் 3.8 கலோரிகள் மட்டும்தான் உள்ளன. ஆனால், ஆரஞ்சில் 20.9 கலோரிகளும், வாழைப்பழத்தில் சுமார் 22.4 கலோரிகளும் மற்றும் ஆப்பிளிலும், பேரிக்காயிலும் சுமார் 32.8 கலோரிகளும் உள்ளன.உடலின் எடையைக் குறைக்கும் ஆர்வமுடையவர்கள் இந்தக் கனியை பாதுகாப்பாக அன்றாடம் உண்ணலாம்.

மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும்:

கிவி கனியில் அளவிற்கு அதிகமாக நார்ப்பகுதிகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், கிவி கனிகளை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.
பெண்கள் எளிதாக கருவுறுதலுக்கான வாய்ப்பை அளிக்கின்றது:
விட்டமின் ஈ-யானது பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு அல்லாமல், பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகின்றது.

ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு:

 
சில மனிதர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகச் செயல்படுகின்றது. மேலும் நுரையீரல்கள் செயல்திறனை அதிகரிக்க இந்தக் கனி பயன்படுகின்றது.
பல்வகையான சத்துக்கள் மிகுந்த கனிகளில் சிறந்த கனியாகக் கருதப்படுகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரட்ஜர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உணவியல் வல்லுநர்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வகையான கனிகளிடம், கிவியின் ‘சத்து அடர்வு நிலை’ பற்றி விரிவான ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டபொழுது, இவர்கள் ஆய்வு செய்த 18 வகையான கனிகளில் அதிக அளவு சத்துக்கள் பொதிந்த சிறந்த கனியாக கிவியைக் கருதுகின்றார்கள். இத்தகைய ஆய்வு முடிவை இவர்கள் அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் The Journal of American College of Nutrition என்ற உணவியல் இதழில் விரிவான ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். 

இந்த ஆய்வுக் கட்டுரையின் முக்கிய தகவல்கள்:

உணவு, மருந்துக் கட்டுப்பாடு அமைப்பானது, ஒரு மனிதன் நலமாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு குறைந்தது 9 வகையான முக்கிய சத்துக்கள் அன்றாட உணவில் தேவைப்படுகின்றது. இத்தகைய சத்துக்களை ஒரு தனிமனிதன் பெற வேண்டுமென்றால் அவன் அன்றாட உணவில், பல்வகையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்த 9 வகையான சத்துக்களும் ஒருசேர கிவி என்ற கனியில் பொதிந்துள்ளது என குறிப்பிடுகின்றார்கள்.உணவியல் குறியீட்டில் கனிவகைகளில் அதிக எண்ணை உடைய கனியாக கிவி கருதப்படுகின்றது.

உணவியல் வல்லுநர்கள் கனிகள் வகைகளில் கிவி கனிக்கு உணவியல் குறியீடு எண்ணாக அதிக அளவு சத்துக்கள் நிறைந்த கனி என்பதால், இதற்கு 16 என்ற எண்ணை வழங்கியுள்ளார்கள். இது முதல் இடமாகும். இதற்கு அடுத்தபடியாக உணவுக் குறியீடு உள்ள கனியான பப்பாளிக்கு 14 அளித்துள்ளார்கள். மெலன் என்ற தர்பூசணிக்கு 13 என்ற குறியீடு எண்ணும், ஸ்ட்ரா பெர்ரிக்கு உணவுக் குறியீடு எண் 12-ம், மாங்கனிக்கு 12-ம், ஆரஞ்சு வகைகளுக்கு குறியீடு எண் 11-ம் வழங்கியுள்ளனர். இத்தகைய கனியானதுஎவ்வகையான பருவங்களில் கிடைக்கின்றன?
இக்கனிக்கு சிறந்த பருவம் ஜூன் மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் வரை சிறந்த பருவமாகக் கருதப்படுகின்றது.

இத்தகைய கனிகளில் எத்தனை வகைகள் உள்ளன?

கிவி கனியில் மூன்று வகைகள் உள்ளன. 1. பச்சை நிற கிவி பழங்கள். 2. தங்க நிற கிவி பழங்கள். 3. சிவப்பு நிற கிவி பழங்கள். முதன் முதலாக இறக்குமதி செய்யப்பட்டது பச்சை நிறத்தில் உள்ள வகைதான். இத்தகைய வகைதான் கடந்த 10 ஆண்டுகளாக அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் அகப்பகுதியானது பச்சையாக இருக்கும்; வெளித் தோலானது சற்று பழுப்பு நிறமாகக் காணப்படும். ஒவ்வொரு கனியும் சுமார் 50 முதல் 60 கிராம் அளவு இருக்கும்.

அண்மைக் காலங்களில் தங்க நிற கிவி பழம் என்ற புதிய வகை இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் சதைப் பகுதியானது மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால் இதற்கு இந்தப் பெயராகும். இந்த வகையாவது, பச்சை வகையை விட அதிக சுவையாக இருக்கும்.

மேலை நாடுகளில் அண்மையில் கிவியில், சிவப்பு வகை என்ற கிவி பழம் விற்பனையில் உள்ளது. கிவி நியூசிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் விற்பனையில் உள்ளன.

22 März 2011

ஆணிக்கூடு

பாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி
- வாஞ்ஜுர்

பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி.

இது பாதத்தை
த் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை
த் தருகிறது.

இந்த
க் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

கால் ஆணி ஏற்பட
க் காரணம்:
பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்கு
ப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாக
ச் சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை:

கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.

இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.

பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.


Quelle - http://vanjoor-vanjoor.blogspot.com/2010/06/blog-post_18.html

10 August 2009

மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)

பாட்டி வைத்தியம்
- சுரேஷ் குமார்


மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:
1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:
மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்:முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.
முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.
பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:
* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.
காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
* கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

- சுரேஷ் குமார்
தமிழ் பிரவாகம்

ஒற்றை தலைவலி

பாட்டி வைத்தியம்
N. சுரேஷ் குமார்


ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.

காரணம்:குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம்.

அறிகுறிகள்:இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்

தீர்வுகள்:பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.
1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.

3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.

5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இதுமிகவும் விலைமதிப்பானது.

7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு
(ஆ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி கேரட் சாறு
இந்த இரண்டு கல்வைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.

8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தட்ம் தரலாம். தேய்த்து விடலாம்.


செய்ய வேண்டியவை:
1. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை
இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

2. 2‍-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.

3. தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.

4. தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:
1. புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக் கூடியவை.
2. வெயிலில் அலைவது.
3. காரமான உணவு வகைகள்.
4. வயிறு முட்ட சாப்பிடுதல்.
5. தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை.


- சுரேஷ் குமார்
தமிழ் பிரவாகம்

28 April 2009

முழங்கை வலி

- Dr.எம்.கே.முருகானந்தன் -

"சந்தைக்குப் போனால் சாமான் தூக்கிக் கொண்டு வரமுடியுதில்லை. முழங் கையிலை ஒரே வலி" என்றாள் வேதனை யுடன் ஒரு பெண்மணி.

"பாரம் தூக்கவே முடியவில்லை. கைவிரல் களை மடித்து, மணிக்கட்டை ஆட்டி வேலை செயயும் போது அந்த வலி மோசமாகிறது'." என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத் தைச் சுட்டிக் காட்டினாள்.

உண்மைதான் ஆனால் பாரம் தூக்குவதால் மட்டும் இவ்வலி வருவதில்லை. கைவிரல் களை மடித்து ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடிக்கும்போது (உதாரணமாக கைலாகு கொடுப்பது, கதவின் கைபிடியைப் பிடித்து இழுப்பது) வலி ஏற்படுவ துண்டு. கைவலியைத் தவிர இவ்விடத்தில் வீக்கமோ, சினப்போ அல்லது விறைப்புத் தன்மையோ சேர்ந்திருப்பதில்லை என்பதை நோயுள்ளவர்கள் பலரும் அவதானித்திருப்பார்கள்.

முழங்கையின் வெளிப் புறத்தில் எற்படும் வலி பெரும்பாலும் கடுமையாக இருக்கும். ஆரம்பத்தில் பொறுக்கக் கூடியதாக இருக்கும் இவ்வலி காலகதி யில் (ஒரு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை)கடுமையாக மாறும். நோய் கடுமையான நிலையில் முழங்கையின் சிறு அசைவு கூட வலியைக் கடுமையாக்கும்.

முழங்கையின் வெளிப்புற மொளி அருகே ஏற்படும் இந்த வலியை ஆங்கி லத்தில் tennis elbow என்பார்கள். காரணம் டெனிஸ் விளையாடுபவர்களிடம் அதிகம் ஏற்படுவதால்தான். ஆனால் டெனிஸ் விளையாடுவது மட்டுமே இந் நோய் வருவதற்குக் காரணமல்ல.

முன்னங்கைகளை அதிகம் உபயோகிக்க வேண்டிய தொழில் செய்பவர்களி லும் இது ஏற்படும். வர்ணம் பூசுவது, இறைச்சி வெட்டுவது, சுட்டியலால் தொடர்ந்து அடிப்பது, நெசவு போன்றவை சில உதாரணங்களாகும்.

கொல்வ் விளையாடுவது போன்று முன்கையை ஒரே விதமாக உபயோகித்து தொடர்ந்து விளையாடுவதாலும், வேலை செய்வதாலும் முழங்கையில் இத்த கைய வலி ஏற்படுவதுண்டு.

உங்கள் முழங்கையின் வெளிப்புறம் திட்டாக தெரியும் மொளியில் இருக்கும் தசைநாண்(Tendon) உட்காயம் ஏற்படு வதாலேயே இந் நோய் ஏற்படுகிறது. இந்த தசைநாண்தான் உங்கள் கை விரல்கள் மற்றும் மணிக்கட்டு ஆகி யவை சரியான முறையில் இயங்கு வதற்கு காரணமாயுள்ளன.

வலியைக் கவனத்தில் எடுக்காது அத்தகைய வேலைகளைச் தொடர்ந்தும் செய்தால் சவ்வு அறுந்துவிடவும் கூடும் என்பது எப்பொழுதாவது ஏற்படக் கூடிய ஆபத்தாகும்.

அவரது மணிக்கட்டு, முழங்கை, தோள் மூட்டு யாவற்றையும் நன்கு பரிசோ தித்துப் பார்த்த போது அவருக்கு வேறு நோய்கள் அதாவது மூட்டு வாதமோ அல்லது நரப்புகளில் பாதிப்புக்களோ இல்லை என்பது தெளிவாகியது. இது டெனிஸ் எல்போ என்பதுதான் என்பது நிச்சயமாயிற்று. 'படம் எடுக்க வேண் டுமா' என்று அவள் கேட்டாள். எக்ஸ் ரே எடுக்க வேண்டியது அவசியமில்லை என்று விளக்கினேன்.

பலருக்கு இந்நோய் எந்தவித சிகிச்சையும் இல்லாது தானாகவே காலகதியில் குணமாகி விடும். ஆரம்ப நிலையில் அவ்விடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலியைத் தணிக்க உதவும். வலிநிவாரணி மாத்திரைகள், மணிக்கட்டிற்கான பட்டி (Elbow Brace) ஆகியவையும் உதவக் கூடும்.

உங்கள் விரல்களுக்கும் மணிக்கட்டுக்குமான சில எளிமையான பயிற்சிகள் உங்கள் வலியைத் தணிக்க நிச்சயம் உதவும்.

விரல்களை விரிக்கும் பயிற்சி

மிகவும் சுலபமான ஒரு பயிற்சியானது ரப்பர் பான்ட் உதவியுடன் உங்கள் விரல்களை விரிக்கும் பயிற்சியாகும். ஒரு ரப்பர் பான்ட்டை உங்கள் நோயுற்ற கையின் விரல்கழளச் சுற்றி அணியுங்கள். இப்பொழுது உங்கள் கை கோலியது போல தோற்றமளிக்கிறது அல்லவா? இனி விரல்களை அகட்டி மெதுவாகக் கையை விரியுங்கள்.

இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள். சில நிமிட ஓய்வுக்குப் பின் மீண்டும் பத்துத் தடவைகள் செய்யுங்கள். மூன்றாவது தடவையும் அவ்வாறு செய்யுங்கள். இவ்வாறு காலை மாலை இரு தடவைகள் செய்ய வேண்டும்.

இறுகப் பிடிக்கும் பயிற்சி

இரண்டாவதாக விரல்களை இறுகப் பிடிக்கும் பயிற்சி செய்யுங்கள். சிறிய உருளை அல்லது பந்து ஒன்றை எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிவதுபோல இறுகப் பிடியுங்கள். தொடர்ந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து செய்யுங்கள். காலை மாலையாக தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகள் செய்ய வேண்டும்.

மணிக்கட்டை கீழ்நோக்கி இழுக்கும் பயிற்சி

உள்ளங்கை கீழே பார்க்குமாறு உங்கள் ஒரு கையை முன்புறமாக நீட்டிப் பிடியுங்கள். இப்பொழுது மறு உள்ளங்கையால் அதைத் தாங்குவது போலப் பிடியுங்கள். இனி மேலுள்ள கையை மணிக்கட்டருகில் கீழ்ப்புறமாக அழுத்தி மடியுங்கள். 15 முதல் 30 செகண்டுகளுக்கு அவ்வாறே பி;டித்த பின் தளர்த்துங்கள். மூன்று தடவை திரும்பச் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண்டும்.

மணிக்கட்டுப் பயிற்சி

உங்களது உள்ளங்கை மேலே பார்க்குமாறு ஒரு முன்னங்கையை மேசை மீது வையுங்கள். பயிற்சி பாண்ட் ஒன்றை கைகளால் பற்றிக் கொண்டு மறுகையால் பாண்டடைப் பற்றிய கையின் மணிக்கட்டுப் பகுதியை உங்கள் உடலை நோக்கி இழுங்கள். பின் கையை மெதுவாக பழைய நிலைக்குக் கொண்டு செல்லுங்கள். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யுங்கள். இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண்டும்.

முழங்கை பயிற்சி

படத்தில் காட்டியபடி ஒரு காலுக்கு முன் மற்றக் காலை வையுங்கள். பயிற்சி பாண்ட்டின் ஒரு முனையை பின்னுள்ள காலுக்குக் கீழே வையுங்கள். மறு முனையைக் உள்ளங்கை மேலே பார்க்குமாறு கையால் பற்றி இழுங்கள். படத்தில் உள்ளபடி உள்ளங்கை தோள்மூட்டு வரை உயருமாறு இழுங்கள். மெதுவாக கையைப் பழைய நிலைக்கு செல்லவிடுங்கள். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் பத்து தடவை வீதம் தினமும் மூன்று தடவைகள் செய்யுங்கள்.

முன்கையை முறுக்கும் பயிற்சி

படத்தில் காட்டியவாறு உங்கள் முன்னங்கையை மேசையில்
உள்ளகை கீழே பாரக்குமாறு வைத்தபடி ஒரு சுட்டியலைப் பிடியுங்கள். இப்பொழுது மேற்புறமாகவும் கீழ்ப்புறமாகவும் மாறிமாறி மெதுவாகச் சுற்றுங்கள். வலி தோன்றும் வரை மட்டும் சுற்றுங்கள். வலி தோன்றினால் நிறுத்துங்கள். ஓவ்வொரு தடவையும் பத்துத் தரங்களாக மூன்று தடவைகள் செய்யுங்கள். சுட்டியலின் பாரம் அதிகமாகிச் சுற்றுவது கடினமாக இருந்தால் சுட்டியலின் தலைப்பக்கமாக கையை நெருக்கிப் பிடியுங்கள்.

ஊசி மருந்து

பயிற்சிகளைச் செய்து, வலிநிவாரணி மருந்துகளையும் உபயோகித்தபோதும் வலி தணியவில்லை எனில் உங்கள் வைத்தியர் முழங்கையின் வலியுள்ள பகுதியில் ஊசி மருந்தை ஏற்றக்கூடும். ஊசி மருந்தானது வலியுள்ள பகுதியில் அழற்சியைத் தணித்து நோயைக் குணமாக்கும்.

ஊசி போட்டு வலி தணிந்த பின்னர் குணமாகிவிட்டது எனக் கை விட்டுவிடாதீர்கள்.

தசைகளை நீட்டி விரிக்கும் பயிற்சிகளும், முழங்கையின் செயற்பாட்டு எல்லையை அதிகரிக்கும் பயிற்சிகளும், தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

படத்தில் முழுங்கையை நீட்டியபடி மணிக்கட்டை மடிக்கும் பயிற்சி காட்ப்பட்டுள்ளது.

90 முதல் 95 சதவிகிதமானவர்களுக்கு முன் கூறிய சிகிச்சைகளுடன் நோய் குணமாகிவிடும். மேற் கூறிய வழிகளைப் குறைந்தது 6 மாதங்கள் கடைப்பிடித்தும் வலி தணியவில்லையெனில் மிகுதி 5 சதவிகிதமானவர்களுக்கு சத்திரசிகிச்சை தேவைப்படலாம். இதன் போது நோயுற்ற தசைநார்த் துண்டை அகற்றி நல்லநிலையிலுள்ளதை எலும்பில் பதிய வைப்பார்கள்.

- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -
ஆதாரம்:- American Academy of Family Physicians

Quelle - Hai Nalama

21 Oktober 2008

விற்றமின் B12 ம் வயதானவர்களின் மூளை சுருங்குதலும்

- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -

“ஒரு விற்றமின் B12 ஊசி அடித்துவிடுங்கோ” இவ்வாறு கேட்டு வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

ஒரு சிலருக்கு இது உண்மையான மருத்துவத் தேவையாக இருந்த போதும் பலருக்கு அது தேநீர் குடிப்பது போல ஒரு பழக்கமோ என நான் எண்ணுவதுண்டு.

“ஒரு தேத்தண்ணி குடிச்சால்தான் உசார் வரும்” என்பது போல ஒரு ஊசி அடித்தால்தான் அவர்களுக்கு மனம் சார்ந்த உற்சாகம் வருவதுண்டு.

இது அவ்வாறிருக்க, வயதானவர்களின் இரத்தத்தில் B12 அளவு குறைவாக இருந்தால் மூளையின் கலங்கள் சிதைவடைவதற்கும், மூளையின் அளவு சுருங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது.

மூளையின் கலங்கள் சிதைவதானது அறிவார்ந்த செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதுமையில் மறதி, அறளை பெயர்தல், அல்ஸீமர் நோய் போன்றவை நீங்கள் அறியாதல்ல. ஆயினும் இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு விற்றமின் B12 குறைபாடுதான் அறிவார்ந்த செயற்பாடுகள் மந்தமாவதற்குக் காரணம் என்று அறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அதிகரித்தல் ஆகியனவும் மூளை பாதிப்படைவதற்கு முக்கிய காரணங்களாகும்.

விற்றமின் B12 குறைபாடுதான் காரணம் எனச் சொல்ல முடியாததற்கு ஆதாரம் இதுதான்.

107 வயதானவர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது. அதன்போது ஆரம்பத்திலும் வருடாவருடமும் அவர்களுக்கு வழமையான மருத்துவப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, அவர்களின் அறிவார்ந்த செயற்பாடுகள் பற்றிய மதிப்பீடு, முளையின் பொருன்மிய நிலையை அறிய MRI பரிசோதனை ஆகியன செய்யப்பட்டன.

அவர்கள் எவரது இரத்தத்திலும் B12 ன் அளவானது வழமையாக எதிர்பார்க்கப்படும் சாதாரணத்தை விடக் குறைவாக இருக்கவில்லை. அதாவது அவர்களுக்கு இரத்தத்தில் டீ12 குறைபாடு இருக்கவில்லை. ஆயினும் ஆய்வின் முடிவில், சாதாரண அளவானதின் குறைந்த நிலையில் B12 இருந்தவர்களது மூளையின் பருமனானது சாதாரண அளவானதின் உயர்ந்த மட்டத்தில் இருந்தவர்களை விட 6 மடங்கு அதிகமாகக் குறைந்திருந்தது.

இதன் அர்த்தம் என்ன?

நாம் வழமையாக எதிர்பாரக்கும் அளவை விட அதிகமான செறிவில் இரத்த B12 இருந்தால் முதுமையில் மூளை சுருங்குவது குறைவு என்பதாகும். எனவே எமது உணவில் B12 அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. முதியவர்களுக்கு இது மேலும் முக்கியமாகும். இறைச்சி, மீன், பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

தாவர உணவுகளில் விற்றமின் B12 இல்லாததால் தாவர உணவு மட்டும் உண்போர் விற்றமின் B12குறைபாட்டிற்கு ஆளாவதற்கான சாத்தியங்கள் அதிகம். பாலூட்டும் தாய்மார், பாலகர்கள், மற்றும் முதியவர்களுக்கு இவ்விற்றமின் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

பேரனீஸியஸ் அனிமியா Pernicious anaemia எனப்படும் ஒரு வகை இரத்தசோகை அதனால் ஏற்படும். நாக்குப் புண்படுதல், தோல் வெளிறல், பசியின்மை, அடிக்கடி ஏற்படும் வயிற்றோட்டம், மாதவிடாய் கோளாறுகள், நோயெதிர்ப்புச் சக்தி குறைதல் ஆகியன அதன் அறிகுறிகளாகும்.

அத்துடன் நரம்புகள் பாதிப்படைவதால் கால் கை விரல்களில் வலிப்பது போன்ற உணர்வு, கால்தசைகளில் வலி, தள்ளாட்டம், மாறாட்டம் போன்ற நரம்பு சார்ந்த அறிகுறிகளும் ஏற்படலாம்.

விற்றமின் குறைபாட்டை குணமாக்குவதற்கு விற்றமின் B12 ஊசியாகப் போடுவதே ஒரு வழி. ஆயினும் மூளை சுருங்குவதைத் தடுப்பதற்கு ஊசி தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு B12 குறைபாடு இருக்கவில்லை.

அத்துடன் அவ் ஆய்வானது அவர்களுக்கு ஊசி போடுவது பற்றியோ, மேலதிக B12 கொடுப்பதால் ஏதாவது நன்மை ஏற்படுமா என்பது பற்றியோ பரிசோதனை எதையும் செய்யவில்லை.

எனவே வயதானவர்கள் மேற் கூறிய உணவுவகைகளை சற்று அதிகமாக உண்டால் போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
நன்றி:- தினக்குரல் 02.10.2008

Quelle - ஹாய் நலமா?

02 Juli 2008

மாதுளையின் மகத்துவம்


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

தகவல் - அனந்தன்
தமிழ்பிரவாகம்

11 Mai 2008

தீண்டத்தகாத உணவா சோறு?

- டாக்டர் எம்.கே. முருகானந்தன் -

அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். "சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்" என்றேன். "அப்ப சோறை நிப்பாட்டட்டோ" என்றார். நான் மனத்திற்குள் சிரித்துக் கொண்டு "சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்" என அப்பாவியாகக் கேட்டேன். "வேறை என்ன? இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்" என்றாள்.

உரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோடு கதைத்து வைத்தவர் போல "சரி நான் சோத்தை கைவிடுகிறன்" என்றார். "சோறு சாப்பிட வேண்டாம் என நான் சொல்லவில்லையே!" என நான் ஆரம்பிக்கவும், என்ன இந்த டொக்டர் மடைத்தனமாகக் கதைக்கிறார் என மனத்திற்குள் எண்ணியவர் போல ஏளனமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை என்மீது வீசினார்.

காச்சல்கார பிள்ளையோடு வந்த அம்மா நான் உணவு பற்றி எதுவும் சொல்லாத போதும் தானாகவே "இவனுக்கு சோத்தை நிப்பாட்டிப் போட்டு பாண் வாட்டிக் கொடுக்கிறேன்" என்றாள்.

ஏன் இவர்களுக்கெல்லாம் சோறு தீண்டத்தகாத உணவாக இருக்கிறது? அப்படியும் சொல்ல முடியாது. இவர்கள் யாவரும் வழமையாக சோறுதான் உண்ணுகிறார்கள். ஆனால் நோயுற்ற நேரத்திற்கு மட்டும் சோறு ஏற்புடையதல்ல என எண்ணுகிறார்கள். இவை தவறான
கருத்துத்தான்.

ஆசிய நாட்டவர்கள் அனைவரினதும் பிரதான உணவான அரிசியில் மாப்பொருள் மாத்திரமின்றி புரதம், விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் யாவுமே உண்டு. அதிலும் முக்கியமாக தீட்டாத அரிசியிலும், புழுங்கல் (நாட்டு) அரிசியிலும் இவை அதிக செறிவில்
உள்ளது. உண்மையில் தாவர உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே நிறைவு செய்கிறது என்பது பலரும் உணராத உண்மையாகும்.

இடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்ற பலகாரங்கள் யாவற்றினதும் முக்கிய கூறாக அரிசிதான் இருக்கிறது. ஆனால் பருக்கைகளாக அல்லாது மாவாக இருக்கிறது. எனவே முதலாமவர் கூறியது போல சோற்றை முற்றாக நிறுத்தி இடியப்பம், புட்டு, அப்பம், தோசை
போன்றவற்றைச் சாப்பிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இரண்டிலும் உள்ளது மாப்பொருள்தான்(Starch). எனவே எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.

இரண்டாமவர் கூறியதுபோல சோற்றை கைவிடுவதிலும் எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமான காரணமும் கிடையாது. அவர் இவற்றில் எதைச் சாப்பிடுகிறார் என்பதை விட எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதே முக்கியமானது. மாப் பொருள் உணவுகளான சோறு, இடியப்பம், புட்டு, அப்பம் போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த உணவின் அளவுற்கு ஏற்ப நார்ப் பொருள் அதிகமுள்ள கீரை இலை வகைகள், மரக்கறி, பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றை அதிகரித்துச் சாப்பிட வேண்டும். இதனால் உண்டவை மெதுவாக சமிபாடடையும், விரைவில் மீண்டும் பசிக்காது. எடையும் அதிகரிக்காது.

காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதியளவு போஷாக்குள்ள உணவு உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்குள்ளது என்பதால் அதையே உட்கொள்ளலாம். விருப்பமில்லையேல் பாற் கஞ்சியாகக் குடிக்கலாம்.
அல்லது சக்திப் பெறுமானமுள்ள வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் காய்ச்சல் என்றவுடன் சோடா வேண்டும் என்பார்கள். சோடா என்று நாம் வழமையாகக் கூறும் மென்பானங்களில் இனிப்புத் தவிர்ந்த போஷாக்கு எவையும் கிடையாது என்பதால் அவை விரும்பத்தக்கவை அல்ல.

எனவே நீங்கள் எந்நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆயினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சோறு ஆனாலும்
அளவோடு உண்ணுங்கள்.

Quelle - Pathivukal

06 Mai 2008

பல் போனால் சொல் போகும்

டாக்டர் டி.பி.மகேந்திரன்

'பல் போனால் சொல் போகும்' என்ற பழமொழியே நமது பல்லின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அப்படிப்-பட்ட பற்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாகப் பராமரிக்கத்தான் வேண்டும். இதோ, பல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற வழி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவ நிபுணர், டாக்டர் டி.பி.மகேந்திரன்.

''குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (milk tooth or temporary tooth) வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் (strepto coccus) எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் (caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை 'நர்ஸிங் பாட்டில் கேரீஸ்' (nursing bottle caries) என்று அழைக்கிறோம்.

குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.

பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் இடையூறா£க இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்கா விட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.

சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும்.. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் (permanent tooth) வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தன் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

என்ன முயன்றும் விரல் சூப்புவதை விட முடியாத குழந்தைகளுக்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. கிளிப் ட்ரீட்மென்ட் (clip treatment) எனும் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சையில் துருப்பிடிக்காத சின்ன கிளிப்புகளை மேல் தாடையில் பொருந்தி விடுவதால் அவர்களால் விரல் சூப்ப முடியாது. ஆனால், இந்த கிளிப்புகளை மாட்டிய பிறகு கடினமான பொருட்களை சாப்பிட்டால் அவை உடைந்து போய் விடக் கூடும்.

பற்களைத் துலக்குகிற விஷயத்தில் எல்லோரும் செய்கிற தவறு பற்களை மட்டும் துலக்குவதுதான். பல் எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு ஈறுகளும் முக்கியம். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளியில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்னைக்கு முதல் படி. எனவே, குழந்தைகள் பல் துலக்கப் பழகும்போதே பல்லுக்கும் ஈறுகளுக்கும் உள்ள இடைவெளியை சுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.''

தகவல்: M.RISHAN SHAREEF

செல்போன் காது கேட்கும் திறனைப் பாதிக்குமா?

டாக்டர் ரவி ராமலிங்கம்
காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர், சென்னை


''செல்போன் பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. காரணம் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளை வைத்து, செல்போனால் சில பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள்.

காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம்.. ஒரு நாளுக்கு அதிக பட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், செல்போன் உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத் தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால், தொடர்ச்சியாக அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.

தவிர, செல்போனில் இருந்து வெப்பமும் வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனில் விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாளடைவில் தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போய்விடலாம்.

செல்போனை நேரடியாக காதுக்கு அருகில் வைத்துப் பேசாமல் ஹேண்ட்ஸ் ஃப்ரீ உபயோகித்துப் பேசுவதன் மூலம் பாதிப்பை ஓரளவு தவிர்க்கலாம்.''

தகவல்- M.RISHAN SHAREEF

18 März 2008

பல் சொத்தையால் ஏற்படும் சைனஸ் தொந்தரவுகள்!

- டாக்டர் ரவி ராமலிங்கம் -

பல்லில் உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்துவைப்பது அவற்றின் இருப்பிடம் அமைப்பு தான். பற்களின் வேருக்கு மிக அருகில்தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன.

பல்லில் உண்டாகும் சொத்தை மேலும் மேலும் வளரும்பட்சத்தில் அது பல்லின் வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸிலரி சைனஸ் அறையையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ்தேங்க ஆரம்பித்துவிடும்.

இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி, அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்துவிடம். பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படி தான் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை டாக்டர் ரவிராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:

பல் சொத்தை மட்டுமல்ல... ஏதோ காரணத்துக்காகப் பல்லைப் பிடுங்கும்போது உஷாராக இல்லையென்றாலும் கஷ்டம்தான். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக் கூடாது.

விபத்துக்களின் போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தைக் குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளைச் சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவைக் கொண்டு வரும் வாய்ப் பிருக்கிறது.

சைனஸ் பிரச்சினையை நாங்கள் இரண்டு வகையாக எடுத்துக் கொள்கிறோம். ஒன்று... திடீரென்று வந்த போதும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இன்னொன்று... நிரந்தரமான, ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ். முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்திவிடலாம்.

மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை வரை போக வேண்டிய திருக்கும். ஆனால் சைனஸ் பிரச்சினையைப் பொருட் படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் `கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக் களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை.

டர்பினேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். ஆனால், இதெல்லாம் சாதாரண காரிய மில்லை. இப்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மருத்துவத்துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடி கிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பதுதான் இப்போதைய நிலை.

முன்பெல்லாம் சைனஸ் பிரச்சனை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய வழியாக இருந்தது. மூக்குக்கு உள்ளே சிரிஞ்ச்வாயிலாக நீரை பீச்சி அடித்தால் அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும். உள்ளே தேங்கி கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்து விடும். காலப்போக்கில் இந்த ஓட்டை தானாகவே குணமாகி, நிரப்பப்பட்டு விடும் என்றாலும், இதில் ஒர பெரிய சிக்கல் இருந்தது.

அடுத்து எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம். மறுபடியும் ஓட்டை போட்டுதான் அதை வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். இப்போது இந்தச் சிக்கலுக்கும் தீர்வு கண்டாகிவிட்டது. மூடப்பட்ட கதவைத் திறந்தாலே உள்ளேயிருக்கும் சீழ் வெளியேறி விடும் அல்லவா... அந்தக் கதவை சரியான அளவில் திறப்பதுதான் இப்போதைய சிகிச்சை முறை.

சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால், எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது.... எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது... அவற்றில் இருப்பதுசளிதானா அல்லது சீழா... என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது.

இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகிவிட்டது. சைனஸ் அறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டியிருக்குமா.. அது தழும்புகளை உண்டாக்கும் அளவுக்கு இருக்குமா? அதற்கெல்லாம் அவசியம் இல்லை.

அறுவை சிகிச்சை கருவிகளைக் கையாள மூக்குக்கு உள்ளே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது. அப்படியில்லை என்றால் வாய்வழியாகக்கூட சைனஸ் அறைகளை அடைத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

எத்மாய்டு அல்லது ப்ரன்டல் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே, தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாகக் கிழிக்க வேண்டியிருக்கும். அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாகத் தெரியாதஅளவுக்கு மிக மிகச் சிறிதாக இருக்கும். கவலையே வேண்டாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

Quelle - ஜோண் நிரூபன்

வாழைப்பழம் - நோய் நீக்கும் மருந்தாக

வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.

இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

வாஞ்ஜுர்

Quelle - http://tamilmediblog.blogspot.com/2007/09/blog-post_4692.html

15 Februar 2008

இறந்தாரை உயிர்ப்பிற்கும் மருத்துவ முயற்சி!

- மருத்துவர் எம்.கே.முருகானந்தன் -

நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென நெஞ்சைப் பொத்திக் கொண்டு துடிக்கிறார். அவருக்கு ஏற்கனவே இருதய வருத்தம் இருப்பது உங்களுக்குத் தெரியும். இது மாரடைப்பு என்பது புரிகிறது. அம்பியூலன்சைக் கூப்பிடுவதற்கு முன்னரே சரிந்து விடுகிறார். முதல் உதவிச் சிகிச்சையில் பரிச்சியம் உள்ள நீங்கள் அவரின் நாடித் துடிப்பைப் பார்க்கிறீர்கள், அது நின்று விட்டது. மூக்கில் கை வைத்துப் பார்க்கிறீர்கள், சுவாசமும் நின்று விட்டது. அவசர அவசரமாக இருதய மசாஜ் செய்து செயற்கை சுவாசமும் கொடுக்கிறீர்கள். பிரயோசனமில்லை. வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது ஏற்கனவே மரணித்து விட்டதாக கூறுகிறார்கள்.

அநியாயச் சாவுதான் என்பதில் சந்தேகமில்லை.முதல் உதவி அறிவுள்ள ஒருவர் அருகிலிருந்து, வேண்டிய உதவியை உடனடியாகச் செய்தும் கூட காப்பாற்ற முடியவில்லை என்பது கவலைக்குரியதுதான்.

உண்மையில் அவர் எப்பொழுது இறந்தார்?

அவரது நிலையை யோசித்துப் பாருங்கள்?

என்ன நடந்தது? அவரது உறுப்புகள் யாவும் இருந்தது இருந்தபடியே எத்தகைய சேதமுமின்றி அப்படியே இருக்கின்றன. குருதி வெளியேறவில்லை. ஆனால் இருதயம் துடிக்கவில்லை, சுவாசப் பையும் இயங்கவில்லை. எனவே மூளையானது உள்ள பிராண வாயுவைச் சேமிப்பதற்றாக இயக்கத்தை நிறுத்தி விட்டது. அவ்வளவுதான். ஆயினும் மருத்துவ ரீதியாக இறந்து விட்டதாக கூறி விட்டார்கள். உண்மையில் அவன் இறந்து விட்டானா?

இறப்பு என்பது என்ன? கலங்களின் (Cell) இறப்புத்தான், ஒருவனின் இறப்பு என்று வழமையாகக் கூறப்படுகிறது. அதாவது அந்த மனிதனின் இருதயத் துடிப்பு நின்றாலும், சுவாசம் நின்றாலும் மனிதன் உடனடியாக இறப்பதில்லை. இவை இரண்டும் செயற்படுவது நின்று 4-5 நிமிடங்களுக்குப் பின்னரே அவனது கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. உங்களது நண்பர் இறந்ததற்குக் காரணம் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் அவரது கலங்களுக்கு பிராண வாயு கிடைக்காததால் அவரது மூளையினது கலங்கள் மீளச் செயற்பட முடியாதவாறு பாதிக்கப் பட்டதேயாகும். அதாவது அக் குறிப்பிட்ட காலஎல்லைக்குள் அவரது இருதயத்தையும், சுவாசப் பையையும் இயங்க வைக்க முடியாததேயாகும்.

இறப்புப் பற்றிய இக் கருத்துத்தான் இது வரை மருத்துவ உலகினால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக இருந்தது. ஆனால் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஒரு கண்டுபிடிப்புக் காரணமாக மேற் கூறிய கருத்து கேள்விக்கு உரியதாகியுள்ளது. Univesity of Pennsylvanவைச் சார்ந்த Dr. Lance Becker ஒரு பிரேதப் பரிசோதனை செய்து கொண்டிருந்த போதுதான் அந்த ஆச்சரியமூட்டும் உண்மை வெளிப்பட்டது. மரணித்து ஒரு
மணித்தியாலயத்திற்கு மேற் சென்று விட்ட போதும் அந்த மனிதனது (அல்லது சடலமா?) கலங்கள் இறந்து விட்டதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை. வியப்படைந்த அவர் தனது பரிசோதனையைத் தொடர்நத போது மேலும் சில மணிநேரத்திற்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருப்பது தெரியவந்தது.

இறந்து சில மணி நேரங்களுக்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருந்த போதும் வைத்தியர்களால் ஏன் அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கும். 5 நிமிடங்கள் பிராண வாயு இல்லாதிருந்தால், அக் கலங்களுக்கு பிற்பாடு பிராண வாயு கிடைத்த போதும் அவை இறப்பதைத் தடுக்க முடிவதில்லை. அது தான் உண்மை. ஆனால் ஏன்?

இதற்கு விடை கிடைத்தால் உங்கள் கேள்விக்கும் விடை கிடைத்து விடும். இறந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப் போகும் முயற்சி ஆராய்ச்சியாக ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

ஆராய்ச்சியானது கலங்களின் உள்ளே உள்ள சிறிய துணிக்கைகளுக்கு இட்டுச் செல்கின்றன. மிட்டோகொன்ரியா (Mitochondria) எனும் அவைதான் கலங்களுக்குத் தேவையான சக்தியை, ஒட்சி ஏற்றம் மூலம் உற்பத்தி செய்கின்றன. இது இன்னுமொரு வித்தியாசமான கடமையையும் செய்கிறது. வழமைக்கு மாறான கலங்களை (உதா புற்றுநோய்க் கலங்கள்) நெறிப்படுத்தப்பட்ட முறையில் மரணிக்கச் செய்கின்றன. இது புற்றுநோய்க்கு எதிரான உடலின் பாதுகாப்பு திட்டம் போலச் செயற்படுகிறது. எனவே 5 நிமிடங்களுக்குப் பின்னர் திடீரென ஒட்சிசன் கொடுக்கும் போது அக் கலங்களுக்கும் புற்றுநோய்க் கலங்களுக்கும் இடையே வேறுபாட்டை உணர முடியாமல் மரணிக்கச் செய்கின்றனவோ என எண்ணுகிறார்கள்.

ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவில் நாம் செய்வது என்ன? இருதயம் நின்று விட்ட ஒருவரை 10-15 நிமிடங்களுக்கு பின்னர் கொண்டு வந்து சேர்க்க முடிகிறது. உடனே இருதயத்தைத் துடிக்க வைக்க மருந்துகள் கொடுப்பதுடன் பிராண வாயுவையும் பம்ப் செய்கிறோம். இரத்த ஓட்டம் இல்லாததால் பட்டினி கிடந்த இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்கிறோம். இது அவற்றின் மரணத்தில் முடிகிறது.

இதற்கு மாறாக மாற்று முறையில் சிகிச்சை செய்தபோது முடிவுகள் சாதகமாக இருந்தன. அதாவது இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்காமல் அப்படியே விட்டுவிட்டு உடலுக்கான இரத்த ஓட்டத்தை செயற்கையாக heart-lung bypass machine மூலம் கொடுத்துக் கொண்டு இருதயத்தை துடிக்க வைத்தார்கள். 80 சத விகிதமானவர்களைக் காப்பாற்ற முடிந்தது.

அத்துடன் குருதியின் வெப்பத்தை 37 இலிருந்து 33 டிகிரி செல்சியஸ்க்கு குறைப்பதன் மூலம், பிராண வாயுவால் மூழ்கடிக்கும் போது கலங்களுக்கு ஏற்படும் இரசாயன மாற்றங்களை குறைக்க முடியும் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இதை வெளியிடங்களிலும் செயற்படுத்தக் கூடியதாக உப்பும் ஜசும் சேர்ந்த ஒரு வித கலவையை ஊசி மூலம் ஏற்றும் முறையையும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இவற்றை கடைப்பிடித்தால் மரணித்தவருக்கும் சிகிச்சை செய்து 'உயிர்ப்பிக்க' முடியும். ஆராச்சிகள் தொடர்கின்றன. அது நாளாந்த செயற்பாட்டிற்கு வந்து, அதுவும் எங்கள் நாட்டிற்கு வந்து சேரும் வரை மாரடைப்பு வராதிருக்க பிரார்திப்போமாக.

kathirmuruga@hotmail.com
Quelle - Pathivukal

08 Februar 2008

முருங்கைக் கீரையின், முருங்கை மரத்தின் மருத்துவப் பயன்கள்

- இக்பால் -

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்தசுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம் திருகுவலு,வயிற்றுப்போக்க ு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயம்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

Quelle - இக்பால்

06 Februar 2008

தலைவலியை நிரந்தரமாக போக்க வேண்டுமா?

- தமிழினி -

தலைவலி வந்துவிட்டால் போதும், உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் "பெனடோல்' பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விழங்கும் "பெய்ன்கில்லர்' எல்லாம், உடலுக்கு கேடானது. 40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், "மைக்ரேன்' என்று சொல்லப் படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும். அமெரிக்காவில், தலைவலி ஆராய்ச்சிக்காகவே, "தேசிய தலைவலி ஆராய்ச்சி பவுண் டேஷன்' என்ற அமைப்பு உள்ளது. தலைவலியைப் போக்க, பல ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை வைத்து, பத்து எளிய வழிகளை இவ்வமைப்பு தொகுத்து வெளியிட்டுள்ளது. அவை என்ன தெரியுமா?

* அமெரிக்காவில், "பீவர் பியூ' என்ற மூலிகை கிடைக்கிறது. ஒரு சில நாள் தொடர்ந்து அதை சாப்பிட்டு வந்தால், தலைவலி திரும்பியே பார்க்காது. நம்மிடம் சுக்கு முதல் ஏகப்பட்ட மூலிகைகள் உள்ளன. அன்றாடம், உணவில் இவற்றை நாம் சேர்த்துக் கொண்டாலே போதும். தலைவலி மட்டுமில்லை, எந்த கோளாறும் அண்டாது. *"பெப்பர்மென்ட் ஆயில்' என்று சொல்லப்படும், வாசனைத் தைலத்தை தொடர்ந்து தடவி வந்தால், மூளையில் உள்ள நரம்புகளை முடுக்கி விடும். மூளையில் உள்ள குறிப்பிட்ட நரம்புதான் வலி சிக்கலைதத் தடுக்கும். அதை முடுக்கி விடுவது தான் இந்த வாசனைத் தைலத்தின் வேலை.

* சில விட்டமின்கள், உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல், மூளை நரம்புகளை முடுக்கி, முழு அளவில் இயங்கச் செய்கின்றன. அதனால், விட்டமின் சத்துகள் தரும் பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலும், பி 12 போன்ற விட்டமின்கள் அதிக பலன் தரும்.

*விட்டமின்கள் போல, கனிம சத்துக்கள் மிக முக்கியம். அதுவும், தலைவலி போன்ற வலிகள் வராமல் தடுக்கின்றன.

* தலைவலிக்கு முக்கிய காரணம், சோர்வு தான். போதுமான தூக்கமின்மையால் சோர்வு ஏற்படுகிறது. குறைந்தபட்சம் ஒருவருக்கு நாள் தோறும் ஏழு மணி நேர தூக்கம் தேவை. அது கிடைத்து விட்டால், தலைவலி வரவே வராது.

* மீன் உணவு சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களை கேட்டுப் பாருங்கள், "தலைவலியா... அப்படீன்னா?' என்று கேட்பர். ஆம், மீன் உணவில் உள்ள, "ஒமேகா 3' எண்ணெய், உடலின் சுகாதாரத்துக்கு பல அரிய பலன்களைத் தருகிறது.

* செயற்கை இனிப்புகள் சேர்ந்த உணவுப் பண்டங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி செய்தாலே, தலைவலி வராது. செயற்கை இனிப்புகள், இரத்த நாளங்களை விரிவடையச் செய்து விடுகிறது. அதனால், தலைவலி வருகிறது.

* அக்குபஞ்சர் சிகிச்சை முறை, எந்தப் பாதிப்பும் இல்லாதது. லேசாக எறும்பு கடிப்பது போல தான் இருக்கும். தலைவலி இருக்கும் இடமே தெரியாது.

* யோகா பயிற்சி செய்து வந்தால், "மைக்ரேன்' தலைவலி கூட விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடும்.

* கடும் வேலை இருந்தாலும், அதை செய்துவிட்டு, சில நிமிடங்கள் கால் ஆற திறந்த வெளியில் நடக்கவும். ஏ.சி.,யை விட்டு வெளியில் வந்து இயற்கை காற்றை சுவாசியுங்கள். தலைவலி வந்த வழியே சென்று விடும்.

இப்போது புரிகிறதா... இனி மாத்திரை போடாதீர்கள், இந்த வழிகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுங்கள், தலைவலி, அடுத்த சில மாதங்கள் நிரந்தரமாக போயே போய் விடும்.

quelle - tamilpiravagam