28 April 2009

முழங்கை வலி

- Dr.எம்.கே.முருகானந்தன் -

"சந்தைக்குப் போனால் சாமான் தூக்கிக் கொண்டு வரமுடியுதில்லை. முழங் கையிலை ஒரே வலி" என்றாள் வேதனை யுடன் ஒரு பெண்மணி.

"பாரம் தூக்கவே முடியவில்லை. கைவிரல் களை மடித்து, மணிக்கட்டை ஆட்டி வேலை செயயும் போது அந்த வலி மோசமாகிறது'." என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத் தைச் சுட்டிக் காட்டினாள்.

உண்மைதான் ஆனால் பாரம் தூக்குவதால் மட்டும் இவ்வலி வருவதில்லை. கைவிரல் களை மடித்து ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடிக்கும்போது (உதாரணமாக கைலாகு கொடுப்பது, கதவின் கைபிடியைப் பிடித்து இழுப்பது) வலி ஏற்படுவ துண்டு. கைவலியைத் தவிர இவ்விடத்தில் வீக்கமோ, சினப்போ அல்லது விறைப்புத் தன்மையோ சேர்ந்திருப்பதில்லை என்பதை நோயுள்ளவர்கள் பலரும் அவதானித்திருப்பார்கள்.

முழங்கையின் வெளிப் புறத்தில் எற்படும் வலி பெரும்பாலும் கடுமையாக இருக்கும். ஆரம்பத்தில் பொறுக்கக் கூடியதாக இருக்கும் இவ்வலி காலகதி யில் (ஒரு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை)கடுமையாக மாறும். நோய் கடுமையான நிலையில் முழங்கையின் சிறு அசைவு கூட வலியைக் கடுமையாக்கும்.

முழங்கையின் வெளிப்புற மொளி அருகே ஏற்படும் இந்த வலியை ஆங்கி லத்தில் tennis elbow என்பார்கள். காரணம் டெனிஸ் விளையாடுபவர்களிடம் அதிகம் ஏற்படுவதால்தான். ஆனால் டெனிஸ் விளையாடுவது மட்டுமே இந் நோய் வருவதற்குக் காரணமல்ல.

முன்னங்கைகளை அதிகம் உபயோகிக்க வேண்டிய தொழில் செய்பவர்களி லும் இது ஏற்படும். வர்ணம் பூசுவது, இறைச்சி வெட்டுவது, சுட்டியலால் தொடர்ந்து அடிப்பது, நெசவு போன்றவை சில உதாரணங்களாகும்.

கொல்வ் விளையாடுவது போன்று முன்கையை ஒரே விதமாக உபயோகித்து தொடர்ந்து விளையாடுவதாலும், வேலை செய்வதாலும் முழங்கையில் இத்த கைய வலி ஏற்படுவதுண்டு.

உங்கள் முழங்கையின் வெளிப்புறம் திட்டாக தெரியும் மொளியில் இருக்கும் தசைநாண்(Tendon) உட்காயம் ஏற்படு வதாலேயே இந் நோய் ஏற்படுகிறது. இந்த தசைநாண்தான் உங்கள் கை விரல்கள் மற்றும் மணிக்கட்டு ஆகி யவை சரியான முறையில் இயங்கு வதற்கு காரணமாயுள்ளன.

வலியைக் கவனத்தில் எடுக்காது அத்தகைய வேலைகளைச் தொடர்ந்தும் செய்தால் சவ்வு அறுந்துவிடவும் கூடும் என்பது எப்பொழுதாவது ஏற்படக் கூடிய ஆபத்தாகும்.

அவரது மணிக்கட்டு, முழங்கை, தோள் மூட்டு யாவற்றையும் நன்கு பரிசோ தித்துப் பார்த்த போது அவருக்கு வேறு நோய்கள் அதாவது மூட்டு வாதமோ அல்லது நரப்புகளில் பாதிப்புக்களோ இல்லை என்பது தெளிவாகியது. இது டெனிஸ் எல்போ என்பதுதான் என்பது நிச்சயமாயிற்று. 'படம் எடுக்க வேண் டுமா' என்று அவள் கேட்டாள். எக்ஸ் ரே எடுக்க வேண்டியது அவசியமில்லை என்று விளக்கினேன்.

பலருக்கு இந்நோய் எந்தவித சிகிச்சையும் இல்லாது தானாகவே காலகதியில் குணமாகி விடும். ஆரம்ப நிலையில் அவ்விடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலியைத் தணிக்க உதவும். வலிநிவாரணி மாத்திரைகள், மணிக்கட்டிற்கான பட்டி (Elbow Brace) ஆகியவையும் உதவக் கூடும்.

உங்கள் விரல்களுக்கும் மணிக்கட்டுக்குமான சில எளிமையான பயிற்சிகள் உங்கள் வலியைத் தணிக்க நிச்சயம் உதவும்.

விரல்களை விரிக்கும் பயிற்சி

மிகவும் சுலபமான ஒரு பயிற்சியானது ரப்பர் பான்ட் உதவியுடன் உங்கள் விரல்களை விரிக்கும் பயிற்சியாகும். ஒரு ரப்பர் பான்ட்டை உங்கள் நோயுற்ற கையின் விரல்கழளச் சுற்றி அணியுங்கள். இப்பொழுது உங்கள் கை கோலியது போல தோற்றமளிக்கிறது அல்லவா? இனி விரல்களை அகட்டி மெதுவாகக் கையை விரியுங்கள்.

இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள். சில நிமிட ஓய்வுக்குப் பின் மீண்டும் பத்துத் தடவைகள் செய்யுங்கள். மூன்றாவது தடவையும் அவ்வாறு செய்யுங்கள். இவ்வாறு காலை மாலை இரு தடவைகள் செய்ய வேண்டும்.

இறுகப் பிடிக்கும் பயிற்சி

இரண்டாவதாக விரல்களை இறுகப் பிடிக்கும் பயிற்சி செய்யுங்கள். சிறிய உருளை அல்லது பந்து ஒன்றை எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிவதுபோல இறுகப் பிடியுங்கள். தொடர்ந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து செய்யுங்கள். காலை மாலையாக தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகள் செய்ய வேண்டும்.

மணிக்கட்டை கீழ்நோக்கி இழுக்கும் பயிற்சி

உள்ளங்கை கீழே பார்க்குமாறு உங்கள் ஒரு கையை முன்புறமாக நீட்டிப் பிடியுங்கள். இப்பொழுது மறு உள்ளங்கையால் அதைத் தாங்குவது போலப் பிடியுங்கள். இனி மேலுள்ள கையை மணிக்கட்டருகில் கீழ்ப்புறமாக அழுத்தி மடியுங்கள். 15 முதல் 30 செகண்டுகளுக்கு அவ்வாறே பி;டித்த பின் தளர்த்துங்கள். மூன்று தடவை திரும்பச் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண்டும்.

மணிக்கட்டுப் பயிற்சி

உங்களது உள்ளங்கை மேலே பார்க்குமாறு ஒரு முன்னங்கையை மேசை மீது வையுங்கள். பயிற்சி பாண்ட் ஒன்றை கைகளால் பற்றிக் கொண்டு மறுகையால் பாண்டடைப் பற்றிய கையின் மணிக்கட்டுப் பகுதியை உங்கள் உடலை நோக்கி இழுங்கள். பின் கையை மெதுவாக பழைய நிலைக்குக் கொண்டு செல்லுங்கள். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யுங்கள். இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண்டும்.

முழங்கை பயிற்சி

படத்தில் காட்டியபடி ஒரு காலுக்கு முன் மற்றக் காலை வையுங்கள். பயிற்சி பாண்ட்டின் ஒரு முனையை பின்னுள்ள காலுக்குக் கீழே வையுங்கள். மறு முனையைக் உள்ளங்கை மேலே பார்க்குமாறு கையால் பற்றி இழுங்கள். படத்தில் உள்ளபடி உள்ளங்கை தோள்மூட்டு வரை உயருமாறு இழுங்கள். மெதுவாக கையைப் பழைய நிலைக்கு செல்லவிடுங்கள். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் பத்து தடவை வீதம் தினமும் மூன்று தடவைகள் செய்யுங்கள்.

முன்கையை முறுக்கும் பயிற்சி

படத்தில் காட்டியவாறு உங்கள் முன்னங்கையை மேசையில்
உள்ளகை கீழே பாரக்குமாறு வைத்தபடி ஒரு சுட்டியலைப் பிடியுங்கள். இப்பொழுது மேற்புறமாகவும் கீழ்ப்புறமாகவும் மாறிமாறி மெதுவாகச் சுற்றுங்கள். வலி தோன்றும் வரை மட்டும் சுற்றுங்கள். வலி தோன்றினால் நிறுத்துங்கள். ஓவ்வொரு தடவையும் பத்துத் தரங்களாக மூன்று தடவைகள் செய்யுங்கள். சுட்டியலின் பாரம் அதிகமாகிச் சுற்றுவது கடினமாக இருந்தால் சுட்டியலின் தலைப்பக்கமாக கையை நெருக்கிப் பிடியுங்கள்.

ஊசி மருந்து

பயிற்சிகளைச் செய்து, வலிநிவாரணி மருந்துகளையும் உபயோகித்தபோதும் வலி தணியவில்லை எனில் உங்கள் வைத்தியர் முழங்கையின் வலியுள்ள பகுதியில் ஊசி மருந்தை ஏற்றக்கூடும். ஊசி மருந்தானது வலியுள்ள பகுதியில் அழற்சியைத் தணித்து நோயைக் குணமாக்கும்.

ஊசி போட்டு வலி தணிந்த பின்னர் குணமாகிவிட்டது எனக் கை விட்டுவிடாதீர்கள்.

தசைகளை நீட்டி விரிக்கும் பயிற்சிகளும், முழங்கையின் செயற்பாட்டு எல்லையை அதிகரிக்கும் பயிற்சிகளும், தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

படத்தில் முழுங்கையை நீட்டியபடி மணிக்கட்டை மடிக்கும் பயிற்சி காட்ப்பட்டுள்ளது.

90 முதல் 95 சதவிகிதமானவர்களுக்கு முன் கூறிய சிகிச்சைகளுடன் நோய் குணமாகிவிடும். மேற் கூறிய வழிகளைப் குறைந்தது 6 மாதங்கள் கடைப்பிடித்தும் வலி தணியவில்லையெனில் மிகுதி 5 சதவிகிதமானவர்களுக்கு சத்திரசிகிச்சை தேவைப்படலாம். இதன் போது நோயுற்ற தசைநார்த் துண்டை அகற்றி நல்லநிலையிலுள்ளதை எலும்பில் பதிய வைப்பார்கள்.

- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -
ஆதாரம்:- American Academy of Family Physicians

Quelle - Hai Nalama

21 Oktober 2008

விற்றமின் B12 ம் வயதானவர்களின் மூளை சுருங்குதலும்

- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -

“ஒரு விற்றமின் B12 ஊசி அடித்துவிடுங்கோ” இவ்வாறு கேட்டு வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

ஒரு சிலருக்கு இது உண்மையான மருத்துவத் தேவையாக இருந்த போதும் பலருக்கு அது தேநீர் குடிப்பது போல ஒரு பழக்கமோ என நான் எண்ணுவதுண்டு.

“ஒரு தேத்தண்ணி குடிச்சால்தான் உசார் வரும்” என்பது போல ஒரு ஊசி அடித்தால்தான் அவர்களுக்கு மனம் சார்ந்த உற்சாகம் வருவதுண்டு.

இது அவ்வாறிருக்க, வயதானவர்களின் இரத்தத்தில் B12 அளவு குறைவாக இருந்தால் மூளையின் கலங்கள் சிதைவடைவதற்கும், மூளையின் அளவு சுருங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது.

மூளையின் கலங்கள் சிதைவதானது அறிவார்ந்த செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதுமையில் மறதி, அறளை பெயர்தல், அல்ஸீமர் நோய் போன்றவை நீங்கள் அறியாதல்ல. ஆயினும் இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு விற்றமின் B12 குறைபாடுதான் அறிவார்ந்த செயற்பாடுகள் மந்தமாவதற்குக் காரணம் என்று அறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அதிகரித்தல் ஆகியனவும் மூளை பாதிப்படைவதற்கு முக்கிய காரணங்களாகும்.

விற்றமின் B12 குறைபாடுதான் காரணம் எனச் சொல்ல முடியாததற்கு ஆதாரம் இதுதான்.

107 வயதானவர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது. அதன்போது ஆரம்பத்திலும் வருடாவருடமும் அவர்களுக்கு வழமையான மருத்துவப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, அவர்களின் அறிவார்ந்த செயற்பாடுகள் பற்றிய மதிப்பீடு, முளையின் பொருன்மிய நிலையை அறிய MRI பரிசோதனை ஆகியன செய்யப்பட்டன.

அவர்கள் எவரது இரத்தத்திலும் B12 ன் அளவானது வழமையாக எதிர்பார்க்கப்படும் சாதாரணத்தை விடக் குறைவாக இருக்கவில்லை. அதாவது அவர்களுக்கு இரத்தத்தில் டீ12 குறைபாடு இருக்கவில்லை. ஆயினும் ஆய்வின் முடிவில், சாதாரண அளவானதின் குறைந்த நிலையில் B12 இருந்தவர்களது மூளையின் பருமனானது சாதாரண அளவானதின் உயர்ந்த மட்டத்தில் இருந்தவர்களை விட 6 மடங்கு அதிகமாகக் குறைந்திருந்தது.

இதன் அர்த்தம் என்ன?

நாம் வழமையாக எதிர்பாரக்கும் அளவை விட அதிகமான செறிவில் இரத்த B12 இருந்தால் முதுமையில் மூளை சுருங்குவது குறைவு என்பதாகும். எனவே எமது உணவில் B12 அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. முதியவர்களுக்கு இது மேலும் முக்கியமாகும். இறைச்சி, மீன், பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

தாவர உணவுகளில் விற்றமின் B12 இல்லாததால் தாவர உணவு மட்டும் உண்போர் விற்றமின் B12குறைபாட்டிற்கு ஆளாவதற்கான சாத்தியங்கள் அதிகம். பாலூட்டும் தாய்மார், பாலகர்கள், மற்றும் முதியவர்களுக்கு இவ்விற்றமின் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

பேரனீஸியஸ் அனிமியா Pernicious anaemia எனப்படும் ஒரு வகை இரத்தசோகை அதனால் ஏற்படும். நாக்குப் புண்படுதல், தோல் வெளிறல், பசியின்மை, அடிக்கடி ஏற்படும் வயிற்றோட்டம், மாதவிடாய் கோளாறுகள், நோயெதிர்ப்புச் சக்தி குறைதல் ஆகியன அதன் அறிகுறிகளாகும்.

அத்துடன் நரம்புகள் பாதிப்படைவதால் கால் கை விரல்களில் வலிப்பது போன்ற உணர்வு, கால்தசைகளில் வலி, தள்ளாட்டம், மாறாட்டம் போன்ற நரம்பு சார்ந்த அறிகுறிகளும் ஏற்படலாம்.

விற்றமின் குறைபாட்டை குணமாக்குவதற்கு விற்றமின் B12 ஊசியாகப் போடுவதே ஒரு வழி. ஆயினும் மூளை சுருங்குவதைத் தடுப்பதற்கு ஊசி தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு B12 குறைபாடு இருக்கவில்லை.

அத்துடன் அவ் ஆய்வானது அவர்களுக்கு ஊசி போடுவது பற்றியோ, மேலதிக B12 கொடுப்பதால் ஏதாவது நன்மை ஏற்படுமா என்பது பற்றியோ பரிசோதனை எதையும் செய்யவில்லை.

எனவே வயதானவர்கள் மேற் கூறிய உணவுவகைகளை சற்று அதிகமாக உண்டால் போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
நன்றி:- தினக்குரல் 02.10.2008

Quelle - ஹாய் நலமா?

02 Juli 2008

மாதுளையின் மகத்துவம்


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

தகவல் - அனந்தன்
தமிழ்பிரவாகம்

11 Mai 2008

தீண்டத்தகாத உணவா சோறு?

- டாக்டர் எம்.கே. முருகானந்தன் -

அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். "சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்" என்றேன். "அப்ப சோறை நிப்பாட்டட்டோ" என்றார். நான் மனத்திற்குள் சிரித்துக் கொண்டு "சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்" என அப்பாவியாகக் கேட்டேன். "வேறை என்ன? இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்" என்றாள்.

உரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோடு கதைத்து வைத்தவர் போல "சரி நான் சோத்தை கைவிடுகிறன்" என்றார். "சோறு சாப்பிட வேண்டாம் என நான் சொல்லவில்லையே!" என நான் ஆரம்பிக்கவும், என்ன இந்த டொக்டர் மடைத்தனமாகக் கதைக்கிறார் என மனத்திற்குள் எண்ணியவர் போல ஏளனமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை என்மீது வீசினார்.

காச்சல்கார பிள்ளையோடு வந்த அம்மா நான் உணவு பற்றி எதுவும் சொல்லாத போதும் தானாகவே "இவனுக்கு சோத்தை நிப்பாட்டிப் போட்டு பாண் வாட்டிக் கொடுக்கிறேன்" என்றாள்.

ஏன் இவர்களுக்கெல்லாம் சோறு தீண்டத்தகாத உணவாக இருக்கிறது? அப்படியும் சொல்ல முடியாது. இவர்கள் யாவரும் வழமையாக சோறுதான் உண்ணுகிறார்கள். ஆனால் நோயுற்ற நேரத்திற்கு மட்டும் சோறு ஏற்புடையதல்ல என எண்ணுகிறார்கள். இவை தவறான
கருத்துத்தான்.

ஆசிய நாட்டவர்கள் அனைவரினதும் பிரதான உணவான அரிசியில் மாப்பொருள் மாத்திரமின்றி புரதம், விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் யாவுமே உண்டு. அதிலும் முக்கியமாக தீட்டாத அரிசியிலும், புழுங்கல் (நாட்டு) அரிசியிலும் இவை அதிக செறிவில்
உள்ளது. உண்மையில் தாவர உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே நிறைவு செய்கிறது என்பது பலரும் உணராத உண்மையாகும்.

இடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்ற பலகாரங்கள் யாவற்றினதும் முக்கிய கூறாக அரிசிதான் இருக்கிறது. ஆனால் பருக்கைகளாக அல்லாது மாவாக இருக்கிறது. எனவே முதலாமவர் கூறியது போல சோற்றை முற்றாக நிறுத்தி இடியப்பம், புட்டு, அப்பம், தோசை
போன்றவற்றைச் சாப்பிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இரண்டிலும் உள்ளது மாப்பொருள்தான்(Starch). எனவே எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.

இரண்டாமவர் கூறியதுபோல சோற்றை கைவிடுவதிலும் எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமான காரணமும் கிடையாது. அவர் இவற்றில் எதைச் சாப்பிடுகிறார் என்பதை விட எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதே முக்கியமானது. மாப் பொருள் உணவுகளான சோறு, இடியப்பம், புட்டு, அப்பம் போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த உணவின் அளவுற்கு ஏற்ப நார்ப் பொருள் அதிகமுள்ள கீரை இலை வகைகள், மரக்கறி, பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றை அதிகரித்துச் சாப்பிட வேண்டும். இதனால் உண்டவை மெதுவாக சமிபாடடையும், விரைவில் மீண்டும் பசிக்காது. எடையும் அதிகரிக்காது.

காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதியளவு போஷாக்குள்ள உணவு உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்குள்ளது என்பதால் அதையே உட்கொள்ளலாம். விருப்பமில்லையேல் பாற் கஞ்சியாகக் குடிக்கலாம்.
அல்லது சக்திப் பெறுமானமுள்ள வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் காய்ச்சல் என்றவுடன் சோடா வேண்டும் என்பார்கள். சோடா என்று நாம் வழமையாகக் கூறும் மென்பானங்களில் இனிப்புத் தவிர்ந்த போஷாக்கு எவையும் கிடையாது என்பதால் அவை விரும்பத்தக்கவை அல்ல.

எனவே நீங்கள் எந்நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆயினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சோறு ஆனாலும்
அளவோடு உண்ணுங்கள்.

Quelle - Pathivukal

06 Mai 2008

பல் போனால் சொல் போகும்

டாக்டர் டி.பி.மகேந்திரன்

'பல் போனால் சொல் போகும்' என்ற பழமொழியே நமது பல்லின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அப்படிப்-பட்ட பற்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாகப் பராமரிக்கத்தான் வேண்டும். இதோ, பல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற வழி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவ நிபுணர், டாக்டர் டி.பி.மகேந்திரன்.

''குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (milk tooth or temporary tooth) வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் (strepto coccus) எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் (caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை 'நர்ஸிங் பாட்டில் கேரீஸ்' (nursing bottle caries) என்று அழைக்கிறோம்.

குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.

பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் இடையூறா£க இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்கா விட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.

சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும்.. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் (permanent tooth) வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தன் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

என்ன முயன்றும் விரல் சூப்புவதை விட முடியாத குழந்தைகளுக்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. கிளிப் ட்ரீட்மென்ட் (clip treatment) எனும் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சையில் துருப்பிடிக்காத சின்ன கிளிப்புகளை மேல் தாடையில் பொருந்தி விடுவதால் அவர்களால் விரல் சூப்ப முடியாது. ஆனால், இந்த கிளிப்புகளை மாட்டிய பிறகு கடினமான பொருட்களை சாப்பிட்டால் அவை உடைந்து போய் விடக் கூடும்.

பற்களைத் துலக்குகிற விஷயத்தில் எல்லோரும் செய்கிற தவறு பற்களை மட்டும் துலக்குவதுதான். பல் எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு ஈறுகளும் முக்கியம். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளியில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்னைக்கு முதல் படி. எனவே, குழந்தைகள் பல் துலக்கப் பழகும்போதே பல்லுக்கும் ஈறுகளுக்கும் உள்ள இடைவெளியை சுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.''

தகவல்: M.RISHAN SHAREEF

செல்போன் காது கேட்கும் திறனைப் பாதிக்குமா?

டாக்டர் ரவி ராமலிங்கம்
காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர், சென்னை


''செல்போன் பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. காரணம் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளை வைத்து, செல்போனால் சில பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள்.

காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம்.. ஒரு நாளுக்கு அதிக பட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், செல்போன் உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத் தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால், தொடர்ச்சியாக அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.

தவிர, செல்போனில் இருந்து வெப்பமும் வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனில் விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாளடைவில் தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போய்விடலாம்.

செல்போனை நேரடியாக காதுக்கு அருகில் வைத்துப் பேசாமல் ஹேண்ட்ஸ் ஃப்ரீ உபயோகித்துப் பேசுவதன் மூலம் பாதிப்பை ஓரளவு தவிர்க்கலாம்.''

தகவல்- M.RISHAN SHAREEF

18 März 2008

பல் சொத்தையால் ஏற்படும் சைனஸ் தொந்தரவுகள்!

- டாக்டர் ரவி ராமலிங்கம் -

பல்லில் உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்துவைப்பது அவற்றின் இருப்பிடம் அமைப்பு தான். பற்களின் வேருக்கு மிக அருகில்தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன.

பல்லில் உண்டாகும் சொத்தை மேலும் மேலும் வளரும்பட்சத்தில் அது பல்லின் வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸிலரி சைனஸ் அறையையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ்தேங்க ஆரம்பித்துவிடும்.

இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி, அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்துவிடம். பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படி தான் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை டாக்டர் ரவிராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:

பல் சொத்தை மட்டுமல்ல... ஏதோ காரணத்துக்காகப் பல்லைப் பிடுங்கும்போது உஷாராக இல்லையென்றாலும் கஷ்டம்தான். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக் கூடாது.

விபத்துக்களின் போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தைக் குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளைச் சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவைக் கொண்டு வரும் வாய்ப் பிருக்கிறது.

சைனஸ் பிரச்சினையை நாங்கள் இரண்டு வகையாக எடுத்துக் கொள்கிறோம். ஒன்று... திடீரென்று வந்த போதும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இன்னொன்று... நிரந்தரமான, ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ். முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்திவிடலாம்.

மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை வரை போக வேண்டிய திருக்கும். ஆனால் சைனஸ் பிரச்சினையைப் பொருட் படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் `கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக் களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை.

டர்பினேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். ஆனால், இதெல்லாம் சாதாரண காரிய மில்லை. இப்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மருத்துவத்துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடி கிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பதுதான் இப்போதைய நிலை.

முன்பெல்லாம் சைனஸ் பிரச்சனை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய வழியாக இருந்தது. மூக்குக்கு உள்ளே சிரிஞ்ச்வாயிலாக நீரை பீச்சி அடித்தால் அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும். உள்ளே தேங்கி கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்து விடும். காலப்போக்கில் இந்த ஓட்டை தானாகவே குணமாகி, நிரப்பப்பட்டு விடும் என்றாலும், இதில் ஒர பெரிய சிக்கல் இருந்தது.

அடுத்து எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம். மறுபடியும் ஓட்டை போட்டுதான் அதை வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். இப்போது இந்தச் சிக்கலுக்கும் தீர்வு கண்டாகிவிட்டது. மூடப்பட்ட கதவைத் திறந்தாலே உள்ளேயிருக்கும் சீழ் வெளியேறி விடும் அல்லவா... அந்தக் கதவை சரியான அளவில் திறப்பதுதான் இப்போதைய சிகிச்சை முறை.

சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால், எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது.... எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது... அவற்றில் இருப்பதுசளிதானா அல்லது சீழா... என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது.

இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகிவிட்டது. சைனஸ் அறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டியிருக்குமா.. அது தழும்புகளை உண்டாக்கும் அளவுக்கு இருக்குமா? அதற்கெல்லாம் அவசியம் இல்லை.

அறுவை சிகிச்சை கருவிகளைக் கையாள மூக்குக்கு உள்ளே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது. அப்படியில்லை என்றால் வாய்வழியாகக்கூட சைனஸ் அறைகளை அடைத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

எத்மாய்டு அல்லது ப்ரன்டல் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே, தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாகக் கிழிக்க வேண்டியிருக்கும். அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாகத் தெரியாதஅளவுக்கு மிக மிகச் சிறிதாக இருக்கும். கவலையே வேண்டாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

Quelle - ஜோண் நிரூபன்

வாழைப்பழம் - நோய் நீக்கும் மருந்தாக

வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.

இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

வாஞ்ஜுர்

Quelle - http://tamilmediblog.blogspot.com/2007/09/blog-post_4692.html

15 Februar 2008

இறந்தாரை உயிர்ப்பிற்கும் மருத்துவ முயற்சி!

- மருத்துவர் எம்.கே.முருகானந்தன் -

நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென நெஞ்சைப் பொத்திக் கொண்டு துடிக்கிறார். அவருக்கு ஏற்கனவே இருதய வருத்தம் இருப்பது உங்களுக்குத் தெரியும். இது மாரடைப்பு என்பது புரிகிறது. அம்பியூலன்சைக் கூப்பிடுவதற்கு முன்னரே சரிந்து விடுகிறார். முதல் உதவிச் சிகிச்சையில் பரிச்சியம் உள்ள நீங்கள் அவரின் நாடித் துடிப்பைப் பார்க்கிறீர்கள், அது நின்று விட்டது. மூக்கில் கை வைத்துப் பார்க்கிறீர்கள், சுவாசமும் நின்று விட்டது. அவசர அவசரமாக இருதய மசாஜ் செய்து செயற்கை சுவாசமும் கொடுக்கிறீர்கள். பிரயோசனமில்லை. வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது ஏற்கனவே மரணித்து விட்டதாக கூறுகிறார்கள்.

அநியாயச் சாவுதான் என்பதில் சந்தேகமில்லை.முதல் உதவி அறிவுள்ள ஒருவர் அருகிலிருந்து, வேண்டிய உதவியை உடனடியாகச் செய்தும் கூட காப்பாற்ற முடியவில்லை என்பது கவலைக்குரியதுதான்.

உண்மையில் அவர் எப்பொழுது இறந்தார்?

அவரது நிலையை யோசித்துப் பாருங்கள்?

என்ன நடந்தது? அவரது உறுப்புகள் யாவும் இருந்தது இருந்தபடியே எத்தகைய சேதமுமின்றி அப்படியே இருக்கின்றன. குருதி வெளியேறவில்லை. ஆனால் இருதயம் துடிக்கவில்லை, சுவாசப் பையும் இயங்கவில்லை. எனவே மூளையானது உள்ள பிராண வாயுவைச் சேமிப்பதற்றாக இயக்கத்தை நிறுத்தி விட்டது. அவ்வளவுதான். ஆயினும் மருத்துவ ரீதியாக இறந்து விட்டதாக கூறி விட்டார்கள். உண்மையில் அவன் இறந்து விட்டானா?

இறப்பு என்பது என்ன? கலங்களின் (Cell) இறப்புத்தான், ஒருவனின் இறப்பு என்று வழமையாகக் கூறப்படுகிறது. அதாவது அந்த மனிதனின் இருதயத் துடிப்பு நின்றாலும், சுவாசம் நின்றாலும் மனிதன் உடனடியாக இறப்பதில்லை. இவை இரண்டும் செயற்படுவது நின்று 4-5 நிமிடங்களுக்குப் பின்னரே அவனது கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. உங்களது நண்பர் இறந்ததற்குக் காரணம் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் அவரது கலங்களுக்கு பிராண வாயு கிடைக்காததால் அவரது மூளையினது கலங்கள் மீளச் செயற்பட முடியாதவாறு பாதிக்கப் பட்டதேயாகும். அதாவது அக் குறிப்பிட்ட காலஎல்லைக்குள் அவரது இருதயத்தையும், சுவாசப் பையையும் இயங்க வைக்க முடியாததேயாகும்.

இறப்புப் பற்றிய இக் கருத்துத்தான் இது வரை மருத்துவ உலகினால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக இருந்தது. ஆனால் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஒரு கண்டுபிடிப்புக் காரணமாக மேற் கூறிய கருத்து கேள்விக்கு உரியதாகியுள்ளது. Univesity of Pennsylvanவைச் சார்ந்த Dr. Lance Becker ஒரு பிரேதப் பரிசோதனை செய்து கொண்டிருந்த போதுதான் அந்த ஆச்சரியமூட்டும் உண்மை வெளிப்பட்டது. மரணித்து ஒரு
மணித்தியாலயத்திற்கு மேற் சென்று விட்ட போதும் அந்த மனிதனது (அல்லது சடலமா?) கலங்கள் இறந்து விட்டதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை. வியப்படைந்த அவர் தனது பரிசோதனையைத் தொடர்நத போது மேலும் சில மணிநேரத்திற்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருப்பது தெரியவந்தது.

இறந்து சில மணி நேரங்களுக்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருந்த போதும் வைத்தியர்களால் ஏன் அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கும். 5 நிமிடங்கள் பிராண வாயு இல்லாதிருந்தால், அக் கலங்களுக்கு பிற்பாடு பிராண வாயு கிடைத்த போதும் அவை இறப்பதைத் தடுக்க முடிவதில்லை. அது தான் உண்மை. ஆனால் ஏன்?

இதற்கு விடை கிடைத்தால் உங்கள் கேள்விக்கும் விடை கிடைத்து விடும். இறந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப் போகும் முயற்சி ஆராய்ச்சியாக ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

ஆராய்ச்சியானது கலங்களின் உள்ளே உள்ள சிறிய துணிக்கைகளுக்கு இட்டுச் செல்கின்றன. மிட்டோகொன்ரியா (Mitochondria) எனும் அவைதான் கலங்களுக்குத் தேவையான சக்தியை, ஒட்சி ஏற்றம் மூலம் உற்பத்தி செய்கின்றன. இது இன்னுமொரு வித்தியாசமான கடமையையும் செய்கிறது. வழமைக்கு மாறான கலங்களை (உதா புற்றுநோய்க் கலங்கள்) நெறிப்படுத்தப்பட்ட முறையில் மரணிக்கச் செய்கின்றன. இது புற்றுநோய்க்கு எதிரான உடலின் பாதுகாப்பு திட்டம் போலச் செயற்படுகிறது. எனவே 5 நிமிடங்களுக்குப் பின்னர் திடீரென ஒட்சிசன் கொடுக்கும் போது அக் கலங்களுக்கும் புற்றுநோய்க் கலங்களுக்கும் இடையே வேறுபாட்டை உணர முடியாமல் மரணிக்கச் செய்கின்றனவோ என எண்ணுகிறார்கள்.

ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவில் நாம் செய்வது என்ன? இருதயம் நின்று விட்ட ஒருவரை 10-15 நிமிடங்களுக்கு பின்னர் கொண்டு வந்து சேர்க்க முடிகிறது. உடனே இருதயத்தைத் துடிக்க வைக்க மருந்துகள் கொடுப்பதுடன் பிராண வாயுவையும் பம்ப் செய்கிறோம். இரத்த ஓட்டம் இல்லாததால் பட்டினி கிடந்த இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்கிறோம். இது அவற்றின் மரணத்தில் முடிகிறது.

இதற்கு மாறாக மாற்று முறையில் சிகிச்சை செய்தபோது முடிவுகள் சாதகமாக இருந்தன. அதாவது இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்காமல் அப்படியே விட்டுவிட்டு உடலுக்கான இரத்த ஓட்டத்தை செயற்கையாக heart-lung bypass machine மூலம் கொடுத்துக் கொண்டு இருதயத்தை துடிக்க வைத்தார்கள். 80 சத விகிதமானவர்களைக் காப்பாற்ற முடிந்தது.

அத்துடன் குருதியின் வெப்பத்தை 37 இலிருந்து 33 டிகிரி செல்சியஸ்க்கு குறைப்பதன் மூலம், பிராண வாயுவால் மூழ்கடிக்கும் போது கலங்களுக்கு ஏற்படும் இரசாயன மாற்றங்களை குறைக்க முடியும் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இதை வெளியிடங்களிலும் செயற்படுத்தக் கூடியதாக உப்பும் ஜசும் சேர்ந்த ஒரு வித கலவையை ஊசி மூலம் ஏற்றும் முறையையும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இவற்றை கடைப்பிடித்தால் மரணித்தவருக்கும் சிகிச்சை செய்து 'உயிர்ப்பிக்க' முடியும். ஆராச்சிகள் தொடர்கின்றன. அது நாளாந்த செயற்பாட்டிற்கு வந்து, அதுவும் எங்கள் நாட்டிற்கு வந்து சேரும் வரை மாரடைப்பு வராதிருக்க பிரார்திப்போமாக.

kathirmuruga@hotmail.com
Quelle - Pathivukal

08 Februar 2008

முருங்கைக் கீரையின், முருங்கை மரத்தின் மருத்துவப் பயன்கள்

- இக்பால் -

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்தசுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம் திருகுவலு,வயிற்றுப்போக்க ு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயம்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

Quelle - இக்பால்