Posts mit dem Label மன அழுத்தம் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label மன அழுத்தம் werden angezeigt. Alle Posts anzeigen

27 Februar 2006

ஆண்களின் மனச்சோர்வு


பார்த்திபனும் கோபியும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறவர்கள். இருவர் வசிப்பதும் அடுத்தடுத்தத் தெருக்களில்தான். வீட்டிலிருந்து ஐந்து நிமிடம் நடந்து பெரிய வீதிக்கு வந்தால் போதும், அவர்கள் நிறுவனத்தின் பேருந்து வந்து அவர்களை அழைத்துச் சென்றுவிடும்.
பேருந்தில் கூட இரண்டுபேரும் பெரும்பாலும் அடுத்தடுத்த இருக்கைகளில்தான் உட்கார்ந்து கொள்வார்கள். சுமார் நாற்பத்தைந்து நிமிடப் பயணத்துக்கு அப்புறம்தான் அலுவலகம் வரும். அத்தனை நேரமும் சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா? பேசிக்கொண்டுதான் செல்வார்கள், உள்ளூர் விஷயங்களில் இருந்து உலக நடப்பு வரை.

ஆனால் போன மாதம் அவர்கள் ஒருவரையருவர் சந்தித்தபோது திடுக்கிட்டனர். அவர்கள் சந்தித்த இடம் அந்த மாதிரி. மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறவும், சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் சென்றிருந்தபோதுதான், அவர்கள் ஒருவரையருவர் பார்க்க நேரிட்டது.

‘‘இவனை நமக்கு நன்கு தெரியும் என்று நினைத்திருந்தோமோ? இவனுக்குமா...?’’ இருவருக்குமே வியப்பாக இருந்தது. பிறகு கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது. அதுதானே மனித இயல்பு! நமக்கு இருக்கும் பிரச்னை இன்னொருவருக்கும் இருந்தால், அதில் அற்ப திருப்தி காண்பது.

பார்த்திபனுக்கும் கோபிக்கும் என்னதான் பிரச்னை? இருவருக்கும் தீவிர மனச்சோர்வு அல்லது மன அழுத்தம். ‘டிப்ரஷன்’ என்பார்களே, அதுதான்.

இந்த இடத்தில் மனச்சோர்வை, ஆண்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் குறிப்பாக பார்க்க வேண்டும். மூன்று வருடங்கள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள். தினமும் நிறைய நேரம் பேசிக்கொள்ள வாய்ப்பு கிடைத்தவர்கள். ஆனாலும் தங்கள் மனதில் என்ன குறை என்பதை, ஒரு வார்த்தைகூட மற்றவரிடம் வெளிப்படுத்தவில்லை.

பார்த்திபனும் கோபியும் விதிவிலக்குகள் அல்ல. பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான். தங்கள் உணர்வுக் கொந்தளிப்பை வேறு யாரிடமும் வெளிப்படுத்தத் தயங்குவார்கள்.

சமீபத்தில் நடந்த சில ஆராய்ச்சிகள் மனச்சோர்வினால், ஆண்களைப் போல இருமடங்கு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது. ஆனால் இதனால் பாதிக்கப்படும் ஆண்கள் குறித்த விவரங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை என்பதும் உண்மை.

என்ன காரணம்? மனச்சோர்வு இருப்பவர்கள் எப்படி அதை வெளிப்படுத்துவார்கள் என்று நமக்கு ஒரு ஐடியா இருக்கும் இல்லையா? ஆனால் மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஆண்களில் பலரும் இந்த விதங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிக் கூறுவது அயோவா பல்கலைக்கழகத்தின் மன நல மருத்துவர்களான ராபினோ மற்றும் கோச்ரன் ஆகியோர்கள்தான். இவர்கள் இருவரும் ஆண்களின் மனவியல் சிக்கல்கள் குறித்து பல முக்கிய நூல்களை எழுதியுள்ளனர்.

இரு வருடங்களுக்கு முன் ‘அமெரிக்கன் ஜானல் ஆஃப் மெடிகல் ஜெனெடிக்ஸ்’ என்ற இதழில் ஒரு முக்கியமான கட்டுரை வெளியாகி இருந்தது. இதில் ஆண்களின் மனச்சோர்வுக்கும் பெண்களின் மனச்சோர்வுக்கும் இடையே மரபணு ரீதியாகவே வேறுபாடுகள் உண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரும் மனச்சோர்வு சிக்கல் தொடர்பான 19 குரோமொசோம் பகுதிகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டனர். இவற்றில் மூன்றுதான் சம்பந்தப்பட்ட ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரி இருந்தது. மற்றவை ஆண்களிடம் ஒருவகை பாதிப்பையும், பெண்களிடம் ஒருவகை பாதிப்பையும் உணர்த்தியது.

ஆண்கள் பொதுவாக அழுவதில்லை. ‘‘ஐய, ஆம்பிளையா இருந்துகிட்டு அழுவாங்களா? போய் புடவை கட்டிக்க’’ என்பதுபோல் கேலி செய்து வளர்க்கும் சமுதாயம் நம்முடையது. பெரும்பாலான நாடுகளில் ஆண்கள் என்றால் கம்பீரம் என்றுதான் அர்த்தம். அரசியல் மாநாட்டில் கண்ணீர் பெருக்கெடுத்த ஓர் அரசியல்கட்சித் தலைவரை இங்கு பத்திரிகைகள் விதவிதமாக கிண்டல் செய்தது நினைவிருக்கலாம்.

அழுவது மட்டுமல்ல, வருத்தத்தை வெளிக்காட்டுவதையே ஆண்கள் கௌரவக் குறைவாக கருதுகிறார்கள். இதனால், மனச்சோர்வு கொண்ட ஆண்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம்தான்.

பின் ஆண்களின் மன இறுக்கம் எப்படித்தான் வெளிப்படும்? பெரும்பாலும் உடல்நலக் கோளாறுகளின் மூலம்தான் இது வெளிப்படுகிறது. தலைவலி அதில் முக்கியமானது. வயிற்றுக்கோளாறு இன்னொரு வெளிப்பாடு. இல்லற உறவில் நாட்டம் குறைந்து போவது வேறு ஒருவகை.

மனச்சோர்வு எனும் மனநோயால் பாதிக்கப்படும் ஆண், அடிக்கடி கோபம் கொள்ளலாம். தொட்டதெற்கெல்லாம் எரிந்து விழலாம். அலுவலகத்தில் திடீரென்று வேலை செய்யமுடியாமல் மனம் மரத்துப்போனது போல் இருக்கும். சீரான தூக்கம் இருக்காது.

இப்படியெல்லாம் மாறினார் கிஷோர் என்பவர். பொறுமையே உருவாக இருந்த அவர் தன் நண்பர்களிடம் அடிக்கடி எரிந்து விழுந்தார். படுத்துக்கொண்ட பத்தாவது நிமிடம் தூங்கிவிடும் பழக்கம் உடைய அவர் மணிக்கணக்கில் தூக்கம் வராமல் சிரமப்பட்டார்.

நண்பர் ஒருவர் அவரை கட்டாயப்படுத்தி மனநல மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். பலவித கேள்விகள். சோதனைகள். முடிவில் ‘‘உங்களுக்கு டிப்ரஷன். எனவே, அதற்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும்’’ என்றார் டாக்டர்.

கிஷோரால் நம்ப முடியவில்லை. ‘‘எனக்கு மனநோயா? சான்ஸே இல்லை’’ என்றார். என்றாலும் டாக்டரும், நண்பரும் வற்புறுத்த சிகிச்சைக்கு சம்மதித்தார்.

இரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு ‘‘இப்போது நான் சந்தோஷமாக உணருகிறேன்’’ என்று கூறுகிறார் கிஷோர்.

மனச்சோர்வு என்பது ஏதோ பெண்கள் சம்மந்தப்பட்டது என்ற கருத்து, சமூகத்தில் நிலவுகிறது. இதன் காரணமாகத்தான் தனக்கு ‘பெண்மைச் சாயல்’ பூசப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் ஆண்கள் ‘‘எனக்கென்ன? நான் நல்லாதான் இருக்கேன்’’ என்று கூறுவது வழக்கமாகி விட்டது. ஆனால் அதேசமயம் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறதே என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

உள்ளதை வெளிப்படுத்தாமல் இருப்பதும், சிகிச்சைக்கு மறுப்பதும் சிலசமயம் உயிருக்கே ஆபத்தாக இருக்கலாம். தீவிர மனச்சோர்வு கொண்ட ஆண்கள் பெண்களை விட அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் எனும் நிலை அமெரிக்காவில் நிலவுகிறது (ஆனால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் அதிகம் பெண்கள்தான். ‘வெற்றி’ வாய்ப்பில் ஆண்கள் ஸ்கோர் செய்கிறார்கள்.

ஆண்களே, உங்களுக்கு மன இறுக்கம் தோன்றி, தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

முதலில் இது அவமானப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த தவறும் செய்துவிடவில்லை. மரபணு, சுற்றுப்புற சூழல் (அதாவது உங்களால் கட்டுப்படுத்த இயலாதவை) உங்கள் மனச்சோர்வுக்குக் காரணமாக அமைந்திருக்கக் கூடும்.

உடனே மனநல மருத்துவரிடம் ஓட வேண்டும் என்பதில்லை. மனதிற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஏதாவது மாற்றங்களை கொண்டு வரமுடியுமா என்று பாருங்கள். ஒரு சின்னச் சுற்றுலா, இடம் மாறுதல், மொட்டை மாடியில் உணவு, அலுவலகத்தில் வேறு திசையில் உங்கள் இறுக்கையை மாற்றிக்கொள்வது போன்ற விஷயங்கள்கூட இதில் உதவலாம்.

மனச்சோர்வு தொடர்ந்தால், உங்கள் குடும்ப டாக்டரை அணுகலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் போன்ற காரணங்கள் கூட மனச்சோர்வுக்கு வழி வகுக்கலாம். காரணங்களை கட்டுக்குள் கொண்டு வந்தாலே மனச்சோர்வு மறைந்துவிடும்.

அப்படியும் மனச்சோர்வு தொடருகிறது என்றால் தயங்காமல் மனநல மருத்துவரையோ, மனவியல் மருத்துவரையோ அணுகுங்கள். அவர்களின் சிகிச்சைக்கு உடன்படுங்கள்.

nantri-Kumutham health

24 Februar 2006

Tension எதனால்?


எதற்கும் கோபப்படாத அர்ச்சனா, அன்று கோபப்பட்டாள். ஃபைல்களைக் கிழித்துப் போட்டாள். வேலையைப் பாதியில் போட்டுவிட்டு, டென்ஷனாக வீட்டிற்கு வந்துவிட்டாள். ‘இனிமேல் வேலைக்கே போகப் போவதில்லை’ என்று கத்தினாள்.

‘மகளுக்கு என்ன ஆச்சு?’ என்று கேட்க பெற்றோருக்குப் பயம். இரண்டுநாள் ஆறப் போட்டார்கள். மூன்றாம் நாள் அவளாகவே நெஞ்சுஎரிச்சல் என்று டாக்டரைப் பார்க்க பெற்றோருடன் போனாள். இந்தச்சாக்கில் அர்ச்சனா இரண்டு நாட்களாக நடந்து கொள்ளும் விதத்தை டாக்டரிடம் தயங்கித் தயங்கிச் சொன்னார்கள்.

பெற்றோர் சொன்னதற்கும் டாக்டரின் பரிசோதனை முடிவுக்கும் நிறையத் தொடர்பு இருந்தது. அர்ச்சனாவுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் தாக்குவதற்கான அறிகுறிகள் நிறையத் தெரிந்தன. அதன் ஆரம்பக்கட்டம்தான் இந்தக் கோபம், டென்ஷன் என்று டாக்டர் சொன்னார்.

டென்ஷனுக்கும், இதய நோய்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி டாக்டர் சொல்லச் சொல்லத்தான் அர்ச்சனா டென்ஷனாவதைக் குறைக்கும் வழிமுறைகளை நாடிப் போனாள்.


டென்ஷன் எதனால்?

டென்ஷன் என்பது, ஏதோ ஒரு சூழ்நிலையில் கோபத்தில் எழுந்து அடங்கும் உணர்வு என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். அது தவறு. மனத்தாலும், உடலாலும் அது பல கட்டங்களைக் கடந்த பின்னர்தான் வெளிப்படும்.
ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு உள்ளுக்குள் எழுகிறது. அதற்கு இடையூறு ஏற்படுவதாக உணர்கிறீர்கள். உடனே, அதைச் சரியாக செய்ய முடியுமோ முடியாதோ என்கிற சந்தேகம் உள்ளுக்குள் வந்துவிடுகிறது. மனம் பதைபதைப்பு அடைகிறது. நெஞ்சு துடிக்கிறது. ஒரு தடுமாற்றம் நடுக்கம் வருகிறது. நிதானம் இழக்கிறது. தவிப்பு ஏற்படுகிறது. இதனால், உடல் திசுக்கள் நிறைய கெடுகின்றன.

உடல்திசுக்கள் கெடக்கெட மனத்திலும், உடலிலும் ஒரு விறைப்பு நிலை உண்டாகிவிடும். இந்தச் சமயம்தான் மனிதர் கண்மண் தெரியாமல் நடந்து கொள்கிறார். அதாவது டென்ஷன் அடைகிறார். எளிதில் டென்ஷன் ஆகிறவர்கள் யார் யார்?

அவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். தலைக்கனமாக இருக்கும். கழுத்துவலி, உடல்வலி இருப்பதாக அடிக்கடி சொல்பவர்கள், திடீர்திடீரென்று இதயத்துடிப்பு அதிகரிப்பதாக உணர்பவர்கள், எடை குறைபவர்கள், உடல் பலவீனமாகவே இருப்பவர்கள், ஞாபகமறதி உள்ளவர்கள், மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் தவிப்பவர்கள், மனச் சஞ்சலம் உள்ளவர்கள், கைகால்களில் நடுக்கம் உள்ளவர்கள், உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வியர்வை கொண்டவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள், எதிலும் ஆர்வமில்லாதவர்கள், எப்போதும் சோகமாகக் காட்சித் தருபவர்கள், பசியின்மை தூக்கமின்மை உள்ளவர்கள், எதன்மீதும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு டென்ஷன் எளிதில் வரும்.
இவையன்றி கீழ்வரும் ஐந்து முக்கிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே ரெட் சிக்னல் காட்டி விட வேண்டும். அது ஓரளவிற்கு டென்ஷனைக் குறைக்க உதவும்.

1. நெஞ்செரிச்சல் (Heartburn): டென்ஷனால் வயிறானது அமிலத்தை அளவுக்கதிகமாக உற்பத்தி செய்துவிடும். அதோடு எண்ணெய்ப் பதார்த்தம் உள்ளிட்ட சில வகை உணவுகள் உண்ணும்போது, அவை மேலும் தீவிரமடைந்து அமிலம் பின்னோக்கித் தள்ளப்பட்டு, நெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அப்போதுதான் நெஞ்செரிச்சல் வந்துபடுத்தும். பிறகு டென்ஷனுக்குக் கேட்கவே வேண்டாம்.

விடுபடவழிகள்: ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள். இது டென்ஷனைக் குறைப்பது மட்டுமல்ல, உணவுக் குழாயில் தங்கியுள்ள அமிலங்களையும் துடைத்தெடுத்துவிடும். தாற்காலிகமாக நெஞ்சு எரிச்சல் வராமல் இருக்கும். ஃபாஸ்ட் புட், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் ஆகியவற்றை உடனே நிறுத்திவிடுங்கள். கூடவே, காபி, தக்காளி சாஸ், வெங்காயம், சாக்லெட், பெப்பர்மிண்ட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2. கை நடுக்கம்: கை நடுக்கம் இருந்தாலே மனிதர் கோபத்தில் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். தங்களுக்குச் சேர வேண்டிய பாராட்டை வேறு யாருக்காவது மேலதிகாரி தந்தால் முதலில் கையை மேசை மேல் குத்துவது போன்று செயல்படுவதைக் கவனித்து இருக்கலாம். காஃபின் என்ற நச்சு, உடலில் இருந்தாலும், இந்த நிலை ஏற்படும்.

விடுபட வழிகள்: உங்களுக்குச் சேர வேண்டியதை மேலதிகாரியிடம் கேட்டுப் பெற முயற்சிக்கலாம். உங்களையும் மீறி ஒரு செயல் நடந்து, அதையட்டி கை நடுக்கம் ஏற்பட்டால் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொள்ளலாம். பெண்கள் கைப்பைக்குள் கையை நுழைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து கை நடுக்கம் இருந்தால் மருத்துவர்தான் நல்லவழி.

3. திடீர் தலைச்சுற்றல்: டென்ஷனாக இருந்தால் சிலருக்குத் திடீரென்று தலைச்சுற்றல் வரும். ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பதற்கும் இது ஒரு அறிகுறியாகும்.

விடுபட வழிகள்: தலைச்சுற்றல் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவேண்டும். உங்களுக்குத் தலைச்சுற்றல் இருந்தால் உடனே கீழே உட்கார்ந்து இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்யுங்கள். காற்றை நன்றாக ஆழமாக உள்இழுத்து அதை நுரையீரலில் சிறிதுநேரம் தங்க வையுங்கள். பின்னர் மெதுவாக மூக்கின் வழியே காற்றை வெளியேற்றுங்கள். இதனால், போதுமான அளவிற்கு ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். தலைச்சுற்றல் இருக்காது. மீண்டும் ஒருமுறை தலைச்சுற்றல் வந்தால் உடனே டாக்டரிடம் செல்லுங்கள்.

4. தோல் அரிப்பு: சிலருக்கு டென்ஷன் ஆரம்பமாகும்போது, ஹார்மோன் உற்பத்தியில் மாற்றம் ஏற்பட்டு, தோல் திசுக்கள் பாதிக்கப்பட்டு அரிப்பு ஏற்படும்.

விடுபடவழிகள் :அரிப்புக் கண்டவர்கள் உடனே பென்சில் அல்லது கையில் கிடைக்கும் பொருள்களால் உடம்பை சொரியக்கூடாது. பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அரிக்கும் இடத்தில் வைக்கலாம். இதற்கானலோஷன் இருந்தால் தடவலாம்.

5. அதிகப்பணம் செலவழிக்கும்போது: எதிர்பாராமல் அளவுக்கு அதிகமாக பணம் செலவழிக்கும் நிலை வந்தால் சிலருக்கு டென்ஷனாக இருக்கும். இது உடல் சம்பந்தப்பட்டதல்ல, என்றாலும், மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதே.

ஷாப்பிங் செல்லும்போது, கையில் உள்ள பணத்திற்குத் தக்கபடி என்னென்ன பொருள்கள் வாங்குவது என்று திட்டமிட்டுச் செயல்படுவது டென்ஷனைக் குறைக்க உதவும்.

23 Februar 2006

மனச்சோர்விலிருந்து விடுபட


மனச்சோர்வு நோய்களிலேயே மிகக் கொடுமையானது சைக்கோடிக் மனச்சோர்வுதான்.

கவிதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த விபரீதம் நடந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றார் என்று மருத்துவமனையில் சேர்த்தார்கள். ‘திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை. மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என்றெல்லாம் பல காரணங்கள் சொல்லப்பட்டன.

அவரது உடம்பில் இருந்த ரத்தக் காயங்களைப் பார்த்த மருத்துவர்கள், அவருக்கு வந்திருக்கும் பிரச்னையை ஆழமாக அலசிப் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான் தனக்குத்தானே ரத்தக் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு, அதைப் பார்த்து ரசிப்பதில் ஒருவித சந்தோஷத்தை கவிதா அனுபவித்து வந்த உண்மை தெரியவந்தது. கத்தியாலும் பிளேடாலும் அவர் தன் கைகளில் அறுத்துக் கொண்டிருக்கிறார்.

‘‘கவிதா ஒரு வகையான சைக்கோடிக் மனச்சோர்வால் (Psychotic Depression) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். உடனே சிகிச்சைக்கு உட்படுத்தினால்தான் அவரைக் குணப்படுத்த முடியும்’’ என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

மனச்சோர்வு நோய்களிலேயே மிகக் கொடுமையானது சைக்கோடிக் மனச்சோர்வுதான். இவர்களிடம் அடிப்படையான சில குறைகள் வெளிப்படையாகத் தென்படும். சக மனிதர்கள் மீது வெறுப்பு, மற்றவர்களால் கைவிடப்பட்டு விட்டோமோ என்ற மனநிலை, இதனால் பிரச்னைகளில் இருந்து விடுபட உயிரை மாய்த்துக் கொள்வதுதான் ஒரேவழி என்ற எண்ணம் எழும். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த எண்ணத்தில் இருந்து விடுபட்டு, சகஜநிலைக்கு வந்தவர்கள்போல் காணப்படுவார்கள்.

சைக்கோடிக் மனச்சோர்வு, லட்சத்தில் நூறு பேருக்கு இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த நூறு பேரில் ஒருவராக நாம் இருக்கக்கூடாது என்றால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடனே மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

அறிகுறிகள்:

நம்பிக்கைக்குரியவர்களே கைவிட்டது போன்ற உணர்வு அடிக்கடி எழுதல், மனதை ஒரு முகப்படுத்த முடியாமை, சின்னச் சின்ன விஷயங்களில் கூட தீர்மானம் எடுக்க முடியாமை, சுற்றியிருப்பவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழகமுடியாத நிலை, பொழுது போக்குகளில் ஆர்வமின்மை, யாரோடும் ஒத்துப் போகாமல் எதையும் எதிர்க்கும் மனப்பான்மை, அமைதியின்மை, எரிந்து விழுதல், பசியின்மை, பாலியலில் ஈடுபாடின்மை, அடிக்கடி தலையில் பாரம், என்று இந்த நோய்க்கு பல அறிகுறிகள் இருக்கின்றன.

மூளையில் உள்ள செரட்டோனின் என்ற இரசாயனப் பொருளின் மாற்றத்திற்குத் தக்கவாறுதான் மனச்சோர்வு மனிதனைத் தாக்குகிறது. அந்த இரசாயனத்தை சமநிலையில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள், சிகிச்சைகள் இப்போது எல்லா நாடுகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

கூடியமட்டிலும் சில பயிற்சிகளை நாள்தோறும் கடைப்பிடித்துவந்தால் சைக்கோடிக் மனச்சோர்வு நோய் நம்மை அண்டாது பாதுகாக்க முடியும். அவற்றுள் சில:

1. உடற் பயிற்சிகள்:

காலையில் எழுந்ததும். பூனை தன் உடலை நீட்டி சோம்பல் முறிப்பதைப் பார்த்திருக்கிறோம். இதேபோல் நாமும் உடலை நீட்டி பயிற்சி செய்தால் மூட்டுக்களிலும் தசைகளிலும் உள்ள விரைப்புகள் நீங்கி, மூளைக்கு நிறைய ரத்தம் பாயும். சுறுசுறுப்புத் தானாக வரும்.

இது தவிர, ஸ்கிப்பிங், ஓடுதல், அதிகாலை நடைப்பயிற்சி ஆகியவை அவசியம்.

2. யோகா, தியானம்:

ஒருவருக்குப் போதிய நேரமும் விருப்பமும் இருந்து யோகா செய்தால் போதும், உளச்சோர்வு நோய் அருகில் வரவே வராது. ஏனென்றால் உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே இணையச்செய்வது யோகா பயிற்சி மட்டுமே.

அதேபோல், குளித்து முடித்தவுடன், கண்களை மூடிக்கொண்டு, மனதில் வரும் எந்தப் பொருளின் மீதும் மனதைச் செலுத்தி ஒருமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு சில நிமிடங்கள் தியானம் செய்வதால் மனதிற்குப் புத்துணர்ச்சியும், சிந்தனைத் தெளிவும் கிட்டும்.

3. உணவில் கட்டுப்பாடு:

எடை அதிகரிப்பும், உடல் பருமனும்தான் சைக்கோடிக் மனச்சோர்வு நோய்க்கு ஆரம்பகால நுழைவாயில்கள் (நோய் தாக்கிய பின்னர் உடல் இளைத்துவிடும் என்பது வேறு விஷயம்). அதற்குக் கட்டுப்பாடான உணவுதான் சிறந்த சிகிச்சை. காய்கறிகள், பழங்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நெய், பாலாடைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

4. புகை, மது கூடாது:

புகை பிடிப்பதால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படும். அதனால் சைக்கோடிக் மனச் சோர்வு நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். இந்நோய் தாக்கப்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி பல விபரீத முடிவுகளை எடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அதனால் இரண்டுமே முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

5. நிம்மதியான தூக்கம்:

ஒருநாளைக்கு 6 மணி நேரமாவது நல்ல தூக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம். களைத்துப்போன உடலுக்கும் மனதிற்கும் நல்ல தூக்கத்தால்தான் புத்துணர்ச்சி தரமுடியும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குப்போவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

6. வேலையில் அக்கறை:

செய்யும் வேலையில் அதிக அக்கறை எடுத்து ஒருமனத்துடன் செயல்பட்டால் மனச்சோர்வுக்கு இடமே இருக்காது. வேலை நேரத்தைத் திட்டமிடத் தெரியாதது, அளவுக்கு அதிகமான வேலைப் பளுவை இழுத்துப் போட்டுக்கொள்வது, மனச்சோர்வை தூண்டக்கூடியவை. இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

7. போட்டி மனப்பான்மையைத் தவிர்த்தல்:

தேவையற்ற, முறையற்ற பேராசையையும் போட்டியையும் தவிர்க்க வேண்டும். போட்டி மனப்பான்மை வளர வளர, மனம் பலவீனப்படுவதோடு, எப்போதும் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சச்சரவுகளையுமே சந்திக்க வேண்டிவரும். இவைதான் பலருக்கு மனச்சோர்வு நோய் வரக் காரணம்.

8. சமுதாயத்தோடு ஒத்துப்போதல்:

நல்ல சமூக உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் இரு தரப்பிலும் நல்ல துணையை, தோழமையை உருவாக்கும். உறவுகளுடன் சேர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்துகொள்வது, இசை, பாட்டு என்று கேட்பதும், கற்றுக்கொள்வதும் சமூக உறவோடு கலப்பதற்கு உதவும்.

சைக்கோடிக் மனச்சோர்வு அளவிற்கு அதிகமாக இருக்கும்போது, நரம்பு மண்டலம் சிதைந்து விடும். அச்சம், சோர்வு, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமை என்று தோன்றி பல விபரீத செயல்களுக்கு இட்டுச் செல்லும். அதனால், மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டவுடன், ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று, உடலையும் மனதையும் முழு செக்கப் செய்துகொள்வது பல வழிகளிலும் உதவக்கூடும்.

quelle - Kumutham

22 Februar 2006

மன அழுத்தம் வராமல் தடுக்க...


_ இரா. மணிகண்டன்

ஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு மனஅழுத்தமிருக்க வாய்ப்புண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.

பாரதியின் கதையைக் கேளுங்கள்.
இருபத்தேழு வயதுதான் பாரதிக்கு. தனியார் கம்பெனியில் வேலை. கைநிறைய சம்பாத்தியம். இருந்தும் ஏதோ ஒரு விரக்தி. ஒருநாள் கையில் அடிபட்டு ரத்தம் அதிகம் கொட்டி, மயக்கமாகிவிட்டதாக மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவரைப் பரிசோதித்த டாக்டருக்கு அதிர்ச்சி.

‘பாரதிக்குக் கையில் அடிபடவில்லை. அவர் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். கை நரம்பை அவராகவே துண்டித்திருக்கிறார்’ என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் கேட்டபோது முதலில் மறுத்தவர், பின்பு ஒப்புக்கொண்டார்.

‘‘டாக்டர்! எனக்குத் தூக்கம் சரியாக வருவதில்லை. அடிக்கடி என் வீட்டாரிடமே எரிந்து எரிந்து விழுகிறேன். மனசு படபடப்பாகவே இருக்கிறது. தொடர்ந்து களைப்பாக இருப்பது போன்றே உணர்கிறேன். பதற்றத்துடனே வேலைக்குப் போக வேண்டியதாக உள்ளது. எந்த நேரமும் எதைப் பற்றியாவது நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். பயம் வரும்போதெல்லாம் ‘நாம் ஏன் வாழ வேண்டும்?’ என்ற எண்ணம்தான் எழுகிறது’’ என்று சொல்லியிருக்கிறார்.

அவரைப் பரிசோதித்த டாக்டர் அவருக்கு மனஅழுத்தம் இருப்பதை டையக்னஸ் செய்து உறுதிப்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து, ‘‘பாரதியின் மூளையில் உள்ள செரட்டோனின் (Serotonin) என்ற ரசாயனப் பொருளின் அளவு மிகக் குறைவாக இருக்கிறது. அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம்தான் இந்த பாதிப்புக்குக் காரணம்’’ என்றார்.

மனஅழுத்தம் என்றால் என்ன?
நம்முடைய மூளையில் செரட்டோனின், டோப்பமின் என்ற ரசாயனப் பொருட்கள் சுரக்கின்றன. இவற்றின் அளவு சமநிலையில் இருந்தால் பிரச்னை இல்லை. கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால்தான் மனஅழுத்தம் ஏற்படும். பாரதிக்கும் இவை சமநிலையில் இல்லாததால்தான் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்கின்றன.

சில சமயம் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே சிலருக்கு மனஅழுத்தம் தீர்ந்துவிடும். அப்போது இந்த ரசாயனப் பொருட்கள் சமநிலைக்குத் தற்செயலாக வந்திருக்கும். அதனால்தான் பயம், படபடப்பு தானாகவே குறைந்து, மனஅழுத்தம் இல்லாமல் போகின்றது. இது எல்லோருக்கும் சாத்தியமல்ல. மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஷிஷிஸிமி குரூப் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். இது செரட்டோனின், டோப்பமின் போன்ற ரசாயனப் பொருட்களின் சுரப்பை குறைவாகவோ, கூடுதலாகவோ சுரக்கவிடாமல் சமநிலையில் வைத்திருக்கும்.

மனஅழுத்தத்தின் அறிகுறிகள்
இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற உணர்வுகள் ஒருவருக்கு இருந்தால், அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எப்போதும் விரக்தியாகப் பேசுவது, அதிகமாகக் கோபப்படுவது, அதிக கவலை, தூக்கமில்லாமலிருப்பது, பசியின்மை, வயிற்றுப்போக்கு, பிறருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்வது, அடிக்கடி சோர்ந்து போவது, ஏதோ நடக்கப்போகிறது என்கிற பயத்துடனேயே இருப்பது, தனிமையில் அழுவது, தேவையில்லாமல் பதற்றமடைவது, சோகமாகவே இருப்பது, நாம் எதற்கும் உபயோகமற்றவர் என்ற எண்ணம் தலைதூக்குவது, சில நேரங்களில் தற்கொலை எண்ணம் ஏற்படுவது... இவை யாவும் மனஅழுத்தத்திற்கான அறிகுறிகள்தான். எடை குறைவதும், தேவைக்கு அதிகமான எடை கூடுவதும்கூட மனஅழுத்தத்தின் அறிகுறிகள்தான் என்கிறார்கள்.

சிலருக்கு இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம் என்கிறார்கள். அளவுக்கு மீறிய மாத்திரைகளைச் சாப்பிடுவதும் இதற்கு இன்னொரு காரணம்.

வருமுன் காப்போம்
மனஅழுத்தம் வரும்முன் காக்க இயற்கையே நமக்குச் சில சிகிச்சைகளை அளித்துள்ளது.

உடற்பயிற்சி
மனஅழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான் மிகப்பெரிய சிகிச்சை. பாரதிக்கு மருத்துவர்கள் மருந்துகளை மட்டும் பரிந்துரை செய்யவில்லை. உடற்பயிற்சிகளையும் சிகிச்சைகளாக அளித்ததால்தான் அவரால் இன்று சகஜ நிலைக்குத் திரும்ப முடிந்தது.

நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் வாக்கிங் போவதும் நல்ல உடற்பயிற்சிதான். வாக்கிங் என்றால் 45 நிமிடங்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக நடக்க வேண்டும். அப்போதுதான் நமது உடலில் மீஸீபீஷீrஜீலீவீஸீ என்ற வேதிப்பொருள் சுரந்து, நல்ல மூடுக்குக் (விஷீஷீபீ மீறீமீஸ்ணீtமீ) கொண்டுவரும்.

யோகா
மனஅழுத்தத்தைக் குறைக்க யோகா வகுப்புகளுக்குப் போகலாம். ஏதோ அரைமணி நேரம் மட்டும் அமைதியாக இருந்துவிட்டு, மற்ற நேரம் முழுக்க டென்ஷனாக இருப்பதில் அர்த்தமில்லை. வாழ்நாள் முழுக்க ஒருவரின் மனதை அமைதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதற்குப் பலன் கிடைக்கும். தியானத்தின் மூலம் தனது அழுக்கை, குரூரத்தை, எரிச்சலை, அதிருப்தியை, கவலையை, விரக்தியை மாற்றிக்கொண்டால்தான் அது வாழ்வை வளப்படுத்தும்.

தனிமையைத் தவிர்த்தல்
கூடிய மட்டும் தனிமையைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்குப் பிடித்தமானவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.

இசை, புத்தகம்
நல்ல புத்தகங்களைப் படிப்பது மனஅழுத்தத்தைத் தவிர்க்கும் என்கிறார்கள். மனதிற்குப் பிடித்த இசையைத் தொடர்ந்து கேட்பது மிக நல்லது. மனம் வேறு சிந்தனைக்குப் போகாமல் கட்டுப்படுத்தும் திறன் இசைக்கு உண்டு.

உணவு
அசைவப் பிரியர்கள் மீன் சாப்பிடலாம். அதில் உள்ள ஒமேகா_த்ரீ என்ற கொழுப்பு திரவம் உங்கள் மனதை நல்ல மூடுக்குக் கொண்டு வரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தியானம்
கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம். கண்ணை மூடிய நிலையில் கடல் அலை, குளக்கரை, இயற்கை காட்சிகளென்று கற்பனை செய்து பார்ப்பது மனஅழுத்தத்திலிருந்து விடுதலை பெற உதவும்.

மன அழுத்தத்திற்கான மாத்திரைகள்
மனஅழுத்தத்தைக் குணப்படுத்தும் மாத்திரைகள் நிறைய உள்ளன. இதற்கு Selective Serotonin Reuptake inhibitors (SSRI) என்று பெயர். இந்த மாத்திரைகள் மூளையில் உள்ள செரட்டோனின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியவை. Prozac, Paxil, Zoloft ஆகிய மருந்துகள் SSRI வகையைச் சேர்ந்தவையே. இதை உங்கள் மருத்துவரின் பரிந்துரைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘‘முறையான மாத்திரைகள், உடற்பயிற்சிகள் ஆகிய இரண்டையும் உரிய காலத்தில் எடுத்துக் கொண்டதால்தான் என்னால் இன்று வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொள்ள முடிகிறது. மனஅழுத்தம் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு என் மனம் பக்குவப்பட்டுள்ளது’’ என்கிறார் பாரதி. அவர் சொல்வது மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகத்தானே இருக்கிறது.

மனஅழுத்தத்தைத் தவிர்க்க சில வழிகள்:

1. உடற்பயிற்சி

2. யோகா, தியானம்

3. ஒமேகா த்ரீ கொழுப்புள்ள மீன்கள்

4. இசை

5. புத்தகம்

6. ஷிஷிஸிமி மாத்திரைகள்