18 März 2008

பல் சொத்தையால் ஏற்படும் சைனஸ் தொந்தரவுகள்!

- டாக்டர் ரவி ராமலிங்கம் -

பல்லில் உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்துவைப்பது அவற்றின் இருப்பிடம் அமைப்பு தான். பற்களின் வேருக்கு மிக அருகில்தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன.

பல்லில் உண்டாகும் சொத்தை மேலும் மேலும் வளரும்பட்சத்தில் அது பல்லின் வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸிலரி சைனஸ் அறையையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ்தேங்க ஆரம்பித்துவிடும்.

இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி, அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்துவிடம். பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படி தான் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை டாக்டர் ரவிராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:

பல் சொத்தை மட்டுமல்ல... ஏதோ காரணத்துக்காகப் பல்லைப் பிடுங்கும்போது உஷாராக இல்லையென்றாலும் கஷ்டம்தான். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக் கூடாது.

விபத்துக்களின் போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தைக் குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளைச் சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவைக் கொண்டு வரும் வாய்ப் பிருக்கிறது.

சைனஸ் பிரச்சினையை நாங்கள் இரண்டு வகையாக எடுத்துக் கொள்கிறோம். ஒன்று... திடீரென்று வந்த போதும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இன்னொன்று... நிரந்தரமான, ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ். முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்திவிடலாம்.

மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை வரை போக வேண்டிய திருக்கும். ஆனால் சைனஸ் பிரச்சினையைப் பொருட் படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் `கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக் களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை.

டர்பினேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். ஆனால், இதெல்லாம் சாதாரண காரிய மில்லை. இப்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மருத்துவத்துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடி கிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பதுதான் இப்போதைய நிலை.

முன்பெல்லாம் சைனஸ் பிரச்சனை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய வழியாக இருந்தது. மூக்குக்கு உள்ளே சிரிஞ்ச்வாயிலாக நீரை பீச்சி அடித்தால் அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும். உள்ளே தேங்கி கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்து விடும். காலப்போக்கில் இந்த ஓட்டை தானாகவே குணமாகி, நிரப்பப்பட்டு விடும் என்றாலும், இதில் ஒர பெரிய சிக்கல் இருந்தது.

அடுத்து எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம். மறுபடியும் ஓட்டை போட்டுதான் அதை வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். இப்போது இந்தச் சிக்கலுக்கும் தீர்வு கண்டாகிவிட்டது. மூடப்பட்ட கதவைத் திறந்தாலே உள்ளேயிருக்கும் சீழ் வெளியேறி விடும் அல்லவா... அந்தக் கதவை சரியான அளவில் திறப்பதுதான் இப்போதைய சிகிச்சை முறை.

சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால், எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது.... எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது... அவற்றில் இருப்பதுசளிதானா அல்லது சீழா... என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது.

இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகிவிட்டது. சைனஸ் அறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டியிருக்குமா.. அது தழும்புகளை உண்டாக்கும் அளவுக்கு இருக்குமா? அதற்கெல்லாம் அவசியம் இல்லை.

அறுவை சிகிச்சை கருவிகளைக் கையாள மூக்குக்கு உள்ளே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது. அப்படியில்லை என்றால் வாய்வழியாகக்கூட சைனஸ் அறைகளை அடைத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

எத்மாய்டு அல்லது ப்ரன்டல் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே, தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாகக் கிழிக்க வேண்டியிருக்கும். அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாகத் தெரியாதஅளவுக்கு மிக மிகச் சிறிதாக இருக்கும். கவலையே வேண்டாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

Quelle - ஜோண் நிரூபன்

வாழைப்பழம் - நோய் நீக்கும் மருந்தாக

வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.

இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

வாஞ்ஜுர்

Quelle - http://tamilmediblog.blogspot.com/2007/09/blog-post_4692.html