27 Februar 2006

நீரிழிவு


நீரிழிவு என்பது உலக அளவில் எல்லா நாட்டினராலும் மிகவும் அஞ்சப்படும் ஒரு குறைபாடு. மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்பதே இவ்வகை அச்சத்திற்கு முதற்காரணம். ஆனால், உணவுக்கட்டுப்பாடு குறித்து அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பெங்களூர் டயாபடீஸ் சென்டரைச் சேர்ந்த டயட்டீஸியன் எஸ். தேவி. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர் தரும் உணவுக் கட்டுப்பாடு பற்றி அறிந்துகொள்ள இக்கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். வயிற்றில் இருக்கும் கணையம் என்ற உறுப்பு, இந்த இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கிறது. இந்தக் கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரசினையும் தோன்றுவதில்லை. கணையம் பழுதடையும் போதுதான் பிரசினையே ஆரம்பமாகிறது. காரணம், இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கும் தன்மையை அது இழந்துவிடுகிறது. அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இந்த நிலையைத் தான் நீரிழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம். நீரிழிவு நோயின் பாதிப்பு, படிப்படியாகத் தலையிலிருந்து பாதம் வரை பரவி, பல்வேறு உடல் உறுப்புகளைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. உடலில் கட்டிகள் ஏற்படுவது, பிளவை உண்டாவது மற்றும் பல சிக்கல்களும் இதனால் ஏற்படலாம்.

இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதன் விளைவாகத் தோன்றும் சிக்கல்களே மிகக் கடுமையானவை. குறிப்பாகக் கண்கள், சிறுநீரகங்கள், இதயம், பாதங்கள் ஆகிய உறுப்புகள் பெருமளவுக்குக் கட்டுப்பாடற்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றன.

நீரிழிவினால் வரும் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, உணவு உண்ணும் முறைகளை மிக இயல்பான வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும். ‘‘உணவுக் கட்டுப்பாடு’’ என்பதன் உண்மையான பொருள்.

நீரிழிவு உணவுக் கட்டுப்பாடு என்பது, சத்துள்ள உணவு, சரியான அளவு, சரியான நேரத்திற்கு உட்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நீரிழிவு நோய்க்குரிய உணவு முறை மிகவும் ஆரோக்கியமானதாகும். குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களும் இவ்வுணவு முறை மற்றும் சமையல் செய்யும் முறை மூலம் பயன் உண்டாகும்.

அரிசி உணவைத் தவிர்த்து விட வேண்டும் என்று ஒரு தவறான கருத்து, நீரிழிவுக்காரர்களிடம் நிலவி வருகிறது. அரிசி, கோதுமை, ராகி, பாஜ்ரா போன்ற தானியங்களில் 70_75% கார்போ ஹைட்ரேட் அடங்கியிருக்கிறது. தனக்கு விருப்பப்பட்ட உணவை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். அரிசி உணவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

பல நீரிழிவு நோயாளிகள் கூறும் பொதுவான குற்றச்சாட்டுகள் என்று பார்த்தால், அது உணவு பரிந்துரையாளர் (Dietician) கொடுக்கப்பட்டுள்ள உணவின் அளவுப்படி, உணவு உட்கொள்ளும் பொழுது, துல்லியமாக அளந்து சாப்பிடுவது என்பது முடியாத ஒன்று என்பதுதான். ஆனால், நீங்கள் உணவை அளந்துதான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. நீங்கள் தினசரி உட்கொள்ளும் அளவை விட, குறைவாகச் சாப்பிட்டால் போதும்.

உணவு உட்கொள்ளும் பொழுது வயிறு நிறைய உணவு உண்ணுதல் தவறு. அதற்குப் பதிலாக, மூன்றில் ஒரு பங்கு உணவும், மற்றொரு பங்கு தண்ணீரும், மற்றொரு பங்கு வயிற்றைக் காலியாக வைப்பதும் அவசியம்.

நீரிழிவு நோயாளிகள் திட்டமிட்ட அளவான, சமநிலையான சத்து அடங்கிய உணவை மற்றவர்களைப் போல உட்கொள்வது மிகவும் அவசியம். அதனால் நீரிழிவு உள்ளவர்கள் அவர்களின் தினசரி உணவு முறையில் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ள கோதுமை, அரிசி, ராகி மற்றும் பல தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரோட்டீன் சத்துள்ள தானியங்கள், நாற்சத்து உள்ள உணவு வகைகள், மற்றும் பல சத்துக்கள் நிறைந்த உணவு வகைகள், பழங்கள், காய் வகைகள், மற்றும் கால்ஷியம் சத்துள்ள பால், மாமிச வகைகள், வாரத்தில் இருமுறை குறைவான அளவில் எண்ணெய், இவை அனைத்தும் தினசரி உணவில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பழங்கள் உண்ணுதல் தவறு இல்லை. எனினும், ஒரு சில பழங்கள் அதாவது வாழைப்பழம், சப்போட்டா, மாம்பழம் போன்ற பழங்களின் கலோரி அதிகமாக உள்ளது. ஆகவே இப்பழங்களை அதிகமான அளவில் உட்கொண்டால், அவை ரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை உயர்த்தக்கூடும். அதனால் ஆரஞ்சு, மோசம்பி, பப்பாளி, ஆப்பிள் ஜூஸ் அருந்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை.

ரெட் மீட் அதாவது மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றிறைச்சி போன்ற உணவு வகையில் சச்சுரேடட் கொழுப்பு அதிகமாக உள்ளது. அவை உடலில் கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தும். ஆதலால் இவைகளைத் தவிர்ப்பது (அல்லது) மிகவும் அபூர்வமாக உண்ணுதல் என்பது நல்லது. சிறுநீரகம் செயலிழந்து போவதற்கு நீரிழிவு நோயே பெரும்பாலும் காரணமாக அமைகிறது. உணவு முறைகளில் சில மாற்றங்கள் மிகவும் அவசியமானது. உணவு முறைகளில் மாற்றங்கள் என்று பார்க்கும்போது, புரோட்டீன் சத்தைக் குறைப்பது என்பது சிறுநீரகப் பிரசிசனை உள்ளவர்களுக்கு மிகவும் அவசியம். தவிர்க்க வேண்டிய உணவு முறைகள் என்றால் உப்பு. அதாவது தினமும் உட்கொள்ளும் அளவை விடக் குறைவாக இருக்க வேண்டும். 35g/per day என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். பொட்டாஷியத்தையும் குறைக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் குறைத்து விட வேண்டும். பொட்டாஷியம் அதிக அளவில் உள்ள உணவு வகைகள் இளநீர், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், ரெட் மீட் (beat, pork, meat) மற்றும் சில பழங்கள் (Mango, Amla, Sapota, Lemon etc) சில காய் வகைகள், (தண்டு கீரை, பசலை கீரை, மரவள்ளிக் கிழங்கு, முருங்கைக் கீரை, பீன்ஸ், முருங்கைக்காய்).

நீரிழிவு நோய் உள்ளவர்களில் பலர் உணவுக் கட்டுப்பாடு பற்றி, தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக் கொண்டு, உணவு பரிந்துரையாளரின் ஆலோசனைகளைப் பெறத் தேவையில்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், நோயாளிகளை அணுகி அவர்களின் உடல் பருமன், சர்க்கரையின் அளவு, கொழுப்பு மற்றும் சிறுநீரகம் சரியான உணவுக் கட்டுப்பாட்டு முறையை ஒவ்வொரு நோயாளிகளின் தேவைக்கு ஏற்றார்போல் கூறுவது உணவு பரிந்துரையாளரின் பணியாகும். இவற்றைப் பொதுவான முறையில் மட்டும் கொடுப்பது போதுமானது அன்று.

பல அறிக்கைகளைப் பார்க்கும் போது, மக்கள் சிலர் ஒரு நாளில் 2_3 சர்விங் காய்வகைகள் மற்றும் 1 சர்விங் பழங்கள் உட்கொள்பவர்களுக்கு இதய பாதிப்பு போன்ற பிரசினைகள் வரும் வாய்ப்பு குறைந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்குக் கொழுப்புச் சத்து அதிகமாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், உணவு வகைகளில் எண்ணெயின் அளவைக் குறைப்பது அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம்.

கொழுப்பு இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சச்சுரேடட் மற்றும் அண்சச்சுரேடட் என்பதாகும். சச்சுரேடட் கொழுப்பு அடங்கியுள்ள உணவு வகைகள் (நெய், வெண்ணெய், கீர், மாமிசம், முழு பால் க்ரீம்) மற்றும் பல காய் வகைகளில் உள்ள எண்ணெய்கள், (தேங்காய் எண்ணெய், பாமாயில்) ஹைடோரோஜினேட்டட் (Hydrogenated) கொழுப்பு அடங்கியுள்ள வகைகள் (வனஸ்பதி, மார்கிரேன்) இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் கெட்டியான பதத்தில் இருக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை அதிகரிக்கும்.

அண்சச்சுரேடட் கொழுப்பானது பாலிஅண்செச்சுரேடட் மற்றும் மேனோ அண்செச்சுரேடட் என்று பிரிக்கலாம். இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் நீர் பதத்தில் இருக்கும். இவை (சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், எள் எண்ணெய், மற்றும் ஆலிங் எண்ணை) வகைகளில் உள்ளன. மற்றும் ஆலிவ் போன்ற பருப்பு வகைகளிலும் உள்ளன.

பல விளம்பரங்களிலும் சூரியகாந்தி எண்ணெய் மிகவும் நல்லது, பாதுகாப்பானது, கொழுப்புச் சத்து நீக்கப்பட்டது என்று விளம்பரம் செய்கின்றனர். ஆனால் எல்லாவிதமான எண்ணெய்களையும் உபயோகிக்கலாம். ஆனால், குறைந்த அளவில் உபயோகிப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் எல்லா விதமான எண்ணெய் வகைகள் அதிக அளவான கலோரியைக் கொண்டது. அவை சர்க்கரையை மற்றும் கொழுப்பையும் நம் உடலில் அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஒரு மாதத்திற்கு ஒரு நபர் உபயோகிக்கும் எண்ணெயின் அளவு லு கிலோகிராம் ஆக இருக்கவேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கலோரியன் அளவை கணக்கிடுகையில் அந்த நபரின் எடை கூடுதலாக வேண்டுமா, குறைக்க வேண்டுமா அல்லது அதே எடையில் நிரந்தரமாக இருக்க வேண்டுமா என்பதைப் பார்த்து, அணுகி கலோரியின் அளவைக் குறிக்கவேண்டும்.

சரியான உடல் எடையைத் (Ideal body weight) தெரிந்துகொள்ள ஒரு முறை இருக்கிறது. முதலில் உயரத்தை சென்டிமீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

உடல் எடை = உயரம் (செ.மீ) 100 x 0.9

(Ideal body weight = Height (in cms) 100 x0.9)

சரியான உடல் எடையைக் கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு 25kcal/kg உடல் எடை தேவைப்படும். அவர்கள் சரியான உடல் எடையைப் பராமரிக்க உதவும். சரியான உடல் எடைக்கு அதிமாக உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு (over weight) 20 kcal/kg உடல் எடை தேவைப்படும். மற்றும் சரியான உடல் எடையை விடக் குறைவாக இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு (weight) 3035 kcal/kg உடல் எடை தேவைப்படும்.

இவ்வாறு உணவுக் கட்டுப்பாட்டில் கலோரி கன்டென்ட் எல்லா நீரிழிவு நோயாளிகளின் எடைக்கும் ஏற்றாற்போல் அமைக்க வேண்டும். அதனால் சரியான எடையுள்ள நபர்களாகத் திகழ்வார்கள். குழந்தைகளுக்கும் வளரும் பருவ குழந்தைகளுக்கும் சரியான முறையில் உணவுக்கட்டுப்பாடு அமைக்கவேண்டும். இதனால் அவர்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எந்தக் குறையும் இன்றி இருக்கவேண்டும்.

தினசரி உணவு முறை திட்டத்தின்படி மொத்த கலோரிகள் சரிசமமாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டியது அவசியம். அதாவது மொத்த கலோரியில் மாவுச்சத்து 6065% புரதச்சத்து (protein) 15 to 20% மற்றும் கொழுப்புச்சத்து (Fat) 15 to 25% இப்படியாக பகிர்ந்திருக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளை அணுகும் போது அவர்களின் உணவு முறை, மதம் (சமூகம்) வசதி, இவற்றிற்கேற்ப பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும். இவைகள் அனைத்தும் ஒவ்வொரு நபருக்கும் புரியும் அளவில் மற்றும் எளிதான முறையில் கூறப்படுதல் வேண்டும்.

quelle - kumutham health

2 Kommentare:

Chandravathanaa hat gesagt…

test

Anonym hat gesagt…

மிக அருமையான கவிதை!!
உங்களது தொகுப்பை எங்களது வலைப்பூக்கள் தளத்தில் பதிவு செய்துள்ளோம், மேலும் உங்களது தொகுப்பை வலைப்பூக்கள் தளத்தில் பதிவு செயுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
வலைப்பூக்கள் தளம்